கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது கடினம்- ஐகோர்ட்டில் அரசு தகவல்
கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது கடினம் என மும்பை ஐகோர்ட்டில் அரசு தெரிவித்து உள்ளது.;
மும்பை,
கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது கடினம் என மும்பை ஐகோர்ட்டில் அரசு தெரிவித்து உள்ளது.
திருநங்கை மனு
விநாயக் காஷித் என்ற திருநங்கை மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் அவர் "கர்நாடகாவில் திருநங்கைகளுக்கு 1 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதுபோல மராட்டியத்திலும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மாநில மின் நிறுவன ஆள்சேர்ப்பு விளம்பரத்தில் திருத்தம் செய்யவேண்டும்" என கூறியிருந்தார்.
திருநங்கை விநாயக் காஷித் பொறியியல் முதுகலை பட்டதாரி ஆவார். அவரின் மனுவை பொறுப்பு தலைமை நீதிபதி நிதின் ஜாம்தார், நீதிபதி சந்தீப் மார்னே அடங்கிய அமர்வு விசாரித்தது.
இடஒதுக்கீடு கடினம்
அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பீரேந்திர சரப் திருநங்கைகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது கடினம் என கூறினார்.
"திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கினால், சுப்ரீம் கோர்ட்டு நிர்ணயம் செய்து உள்ள 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை மீற வேண்டிய நிலை வரும். ஏற்கனவே எல்லா வகையான இடஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கூடுதலாக திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது கடினம்" என்றார்.