பெற்றோரின் மிரட்டலால் பாதிக்கப்பட்ட ஓரினச் சேர்க்கை தம்பதிக்கு போலீஸ் பாதுகாப்பு - ஐகோர்ட்டு உத்தரவு
பெற்றோரின் மிரட்டலால் பாதிக்கப்பட்ட ஓரின சேர்க்கை தம்பதிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.;
மும்பை,
பெற்றோரின் மிரட்டலால் பாதிக்கப்பட்ட ஓரின சேர்க்கை தம்பதிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ஓரினச் சேர்க்கை தம்பதி
மராட்டிய பெண்ணுக்கு, வெளிமாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைதளம் மூலம் பழக்கமானார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் வெளிமாநிலத்தை சேர்ந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி மராட்டியம் வந்ததுடன், தனது காதலியுடன் சேர்ந்து வாழ தொடங்கினாள். இந்த நிலையில் வெளிமாநில பெண்ணின் குடும்பத்தினர் அவர் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தியதுடன் அவரிடம் மோசமான அணுகுமுறையை கடைப்பிடித்ததாக தெரிகிறது. இதையடுத்து ஓரின சேர்க்கை தம்பதி வெளிமாநிலத்தில் சென்று வாழ்க்கை நடத்த தொடங்கினர். இருப்பினும் தொடர்ந்து போலீசார் சம்மன் அனுப்பி தம்பதியை அச்சுறுத்தினர். வெளிமாநிலத்தை சேர்ந்த பெண் தனது வீட்டுக்கு செல்லவில்லை என்றால் மராட்டியத்தை சேர்ந்த பெண் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டு இருந்தது.
ஐகோர்ட்டு உத்தரவு
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஓரின சேர்க்கை தம்பதி மும்பை ஐகோர்ட்டில் பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு ஓரினச்சேர்க்கை தம்பதி எதிர்கொண்டு வரும் அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீசாருக்கு உத்தரவிட்டது. மேலும் போலீஸ் அதிகாரிகள் தொலைபேசி எண்களை தம்பதிக்கு வழங்குமாறும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இதுபோன்ற வழக்குகளை கையாள்வது குறித்து போலீசாருக்கு விழிப்புணர்வு எற்படுத்த வேண்டும் எனவும் ஐகோர்ட்டு கூறியது.