மாந்திரீகம் பலன் அளிக்காததால் மந்திரவாதி படுகொலை

பிரிந்த மனைவி திரும்பி வர மாந்திரீகம் பலன் அளிக்காத ஆத்திரத்தில் மந்திரவாதி கொலை செய்யப்பட்ட சம்பவம் பால்கரில் நடந்துள்ளது.

Update: 2023-05-29 18:45 GMT

பால்கர்,

பிரிந்த மனைவி திரும்பி வர மாந்திரீகம் பலன் அளிக்காத ஆத்திரத்தில் மந்திரவாதி கொலை செய்யப்பட்ட சம்பவம் பால்கரில் நடந்துள்ளது.

பிணமாக மீட்பு

பால்கரில், உசகான் ஏரிக்கு செல்லும் வழியில் உள்ள சாலை ஓரத்தில் கடந்த மே 25-ந் தேதி 60 வயது முதியவர் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்தவர் பெயர் பிவா பிக்யா வைதா என்பதும், அவரை மர்மநபர் கொலை செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். முதல்கட்டமாக அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள சிர்சாத் கிராமத்தில் பதுங்கி இருந்த கொலையாளியை கைது செய்தனர்.

மந்திரவாதி

அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பிவா பிக்யா வைதா ஒரு மந்திரவாதியாவார். கைது செய்யப்பட்டவரின் மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். எனவே தனது மனைவி மனம் மாறி தன்னுடன் இணைய வேண்டும் என்பதற்காக மந்திரவாதியை அனுகினார்.

மந்திராவதியும் மனைவி அவருடன் சேருவதற்காக மாந்திரீக பூஜை செய்தார். இதற்காக அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரத்தை பெற்றுக்கொண்டார். ஆனால் அவர் கூறியபடி மனைவி மனம் மாறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர், மந்திரவாதியை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி கடந்த மே 24-ந் தேதி மந்திரவாதியை மது குடிக்க அழைத்து சென்ற அவர், அங்கு சிமெண்டு கல்லால் தலையில் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. கைதானவர் மீது கடந்த 2017-ம் ஆண்டு ஒரு கொலை வழக்கு பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்