13 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய கிளீனர்

கல்வராயன்மலை அருகே 13 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய கிளீனர், சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற போது போலீசில் சிக்கினார்.

Update: 2022-06-09 17:30 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அருகே உள்ள கீழ்நிலவூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன் மகன் சுதாகர் (வயது 22), லாரி கிளீனர். இவர் கடந்த ஆண்டு பக்கத்து கிராமத்தில் நடந்த திருமண விழாவுக்கு சென்ற போது, அந்த கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறியது. இதற்கிடையே கடந்த 23.1.2022 அன்று சுதாகர், அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று சாமி படத்தின் முன்பு வைத்து தாலி கட்டியுள்ளார்.

சிறுமி கர்ப்பம்

அதன் பிறகு சிறுமி, சுதாகர் வீட்டிலேயே அவருடன் வசித்து வந்ததாக தெரிகிறது. இதில் இருவரும் அடிக்கடி உடலுறவு கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுதாகரின் உறவினர்கள், சிறுமியை சிகிச்சைக்காக கிளாக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுமி, மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கிருந்த டாக்டர்கள், 13 வயது சிறுமி கர்ப்பிணியாக இருப்பது பற்றி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

போக்சோ சட்டத்தில் கைது

அதன் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஷ்வரி மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்