ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு 3 மோப்ப நாய்கள் ஒப்படைப்பு

ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு குற்றவாளிகளை விரைவில் கண்டறிவதற்காக 3 துப்பறியும் நாய்கள் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2022-05-03 09:30 GMT
ஆவடி:

சென்னையிலிருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகம் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் இயங்கி வருகிறது. அதன் கட்டுப்பாட்டில் உள்ள 25 காவல் நிலையங்கள் உள்ளன.

அப்பகுதிகளில் நடைபெறும் கொலை, கொள்ளை, உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காகவும், வெடிகுண்டு வைக்கப்படும் இடங்களை விரைவில் கண்டுபிடிக்க உதவும் வகையில் மோப்ப நாய்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

டோனி, ஜான்சி, ரீட்டா ஆகிய மூன்று மோப்ப நாய்கள் சென்னை போலீஸ் கமிஷனரகத்திலிருந்து ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இவைகளில் ரீட்டா, ஜான்சி ஆகியவை முதல்வரின் பாதுகாப்பு பணி மற்றும் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

இந்த மோப்ப நாய்கள் மாதவரம் பால்பண்ணை அருகே தங்க வைக்கப்பட்டு மூன்று காவலர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் டோனி என்ற நாய் ஆண் நாய். ரீட்டா, ஜான்சி ஆகிய இரண்டும் பெண் நாய்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மூன்று மோப்ப நாய்களும் சென்னையிலிருந்து ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்