ஓமலூர் அருகே துணிகரம்: பூட்டிய வீட்டில் பீரோவை உடைத்து 30 பவுன் நகை, பணம் கொள்ளை

ஓமலூர் அருகே பூட்டிய வீட்டில் பீரோவை உடைத்து 30 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.;

Update:2023-07-27 02:05 IST

ஓமலூர்:

பூட்டிய வீட்டில் கொள்ளை

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பூசாரிபட்டி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் பெருமாயி (வயது 60). இவருடைய கணவர் இறந்து விட்டார். வடிவேல் என்ற மகனும், செல்வி என்ற மகளும் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகி சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். பெருமாயி தன்னுடைய மகன் வீட்டுக்கு சென்னைக்கு சென்று விட்டார்.

இதற்கிடையே பெருமாயி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதுபற்றி அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து பார்த்த போது, வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

30 பவுன்

பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது. இதுபற்றி பெருமாயி தீவட்டிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு ஒமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா, இன்ஸ்பெக்டர் குணசேகர் மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்து விசாரணை நடத்தினர். வீடுகளில் பதிவாகி இருந்த ரேகைகளை போலீசார் பதிவு செய்தனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்