13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்
அணைக்கட்டு அருகே 13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.;
அணைக்கட்டு அருகே 13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
பாலியல் பலாத்காரம்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. கடந்த ஆண்டு 8-ம் வகுப்பு முடித்த சிறுமி குடும்ப சூழ்நிலை காரணமாக இந்தாண்டு பள்ளிக்கு செல்லவில்லை.
சிறுமியின் தந்தை உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாகவும், இதையொட்டி அவர் அவ்வப்போது வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மனைவியுடன் சென்று வந்தாகவும் கூறப்படுகிறது. அந்த சமயம் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இதனை அறிந்த அணைக்கட்டு தாலுகா மூலக்கேட் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பிரபாகரன் (வயது 33) கடந்த ஜூன் மாதம் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து பெற்றோர் உள்பட யாரிடமும் தெரிவிக்க கூடாது. அதையும் மீறி கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
அதனால் பயந்துபோன சிறுமி யாரிடமும் இதுபற்றி தெரிவிக்கவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்திய பிரபாகரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
தொழிலாளி கைது
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு திடீரென கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது.
இதையடுத்து பெற்றோர் சிகிச்சைக்காக அவரை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டரிடம் சிறுமி நடந்த சம்பவம் பற்றி கூறினார்.
அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த டாக்டர் உடனடியாக சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து சிறுமியின் தாயார் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வாசுகி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து பிரபாகரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தார்.
பிரபாகரனுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.