வீடற்ற மக்களுக்காக இரவு நேர காப்பகம்: மெரினாவில் திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்

86 நபர்களுக்கு பாய், தலையணை, படுக்கைவிரிப்பு உள்ளிட்ட நல உதவி தொகுப்புகளையும் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.;

Update:2025-12-22 18:17 IST

சென்னை,

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (22.12.2025) சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டை மண்டலம், மெரினா கடற்கரை, அண்ணா பூங்கா அருகில் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 86.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வீடற்றோருக்கான இரவுநேர காப்பகத்தினை திறந்து வைத்து, காப்பகத்தில் தங்கிடும் 86 நபர்களுக்கு பாய், தலையணை, படுக்கைவிரிப்பு உள்ளிட்ட நல உதவி தொகுப்புகளை வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;

”சென்னை மெரினா கடற்கரையில் தங்கி, கைவினைப் பொருட்கள், பலூன்கள், அழகு சாதன பொருட்கள், பூக்கள் எல்லாம் விற்று வந்த 86 ஆதரவற்றோர்களுக்கு நம்முடைய முதலமைச்சரின் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர மாநகராட்சியின் சார்பாக, இங்கே கடற்கரை பகுதியில் அவர்கள் தங்கியிருப்பதற்காக 2,500 சதுர அடியில் 86 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீடற்றோர் இரவு நேர காப்பகத்தை இன்று நானும் நம்முடைய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினர், மேயர், துணை மேயர் எல்லோரும் வந்து இன்றைக்கு திறந்து வைத்திருக்கின்றோம்.

இரவு நேரங்களிலும், மழை நேரங்களிலும், வெயிலிலும் அவர்களுக்கு தங்குவதற்கு இடமில்லாமல் இருந்த சூழலில் அவர்களுக்கெல்லாம் இந்த வசதி ஒரு பயனுள்ளதாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு முதலமைச்சர் இந்த கட்டளையிட்டுள்ளார். இந்த காப்பகத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி கழிப்பிடங்கள், குளியலறைகள், அவர்கள் பொருட்களை எல்லாம் சேமித்து வைப்பதற்கு அலமாரிகள், குடிநீர் வசதி, மின் வசதி இப்படி அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் அவர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

இவர்களுக்கு இன்றைக்கு மாநகராட்சியின் சார்பாக பாய், போர்வை, தலையணை உள்ளிட்ட 15 அத்தியாவசிய பொருட்களும் தரப்பட்டிருக்கிறது. இதே மாதிரி மெரினாவில் தங்கியிருக்கக்கூடிய மற்றவர்களுக்கும் இதுபோன்ற வசதியை விரிவுபடுத்துவதற்கான அந்த ஆலோசனைகளிலும் நாங்கள் ஈடுபட்டிருக்கின்றோம். ஏற்கனவே மாநகராட்சியின் சார்பாக வீடற்றோர்களுக்கு ஒரு 45 இடங்களில் இதுபோன்று வசதிகள் இருக்கின்றது. இது கூடுதலாக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இன்னும் ஆய்வு செய்து இங்கு பக்கத்திலேயே சொன்னதுபோல இன்னும் அதிகமான பேர் தங்குவதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஆலோசனைகளையும் செய்து கொண்டிருக்கிறோம். ”

இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்