அடகு வைத்ததை மீட்டு வியாபாரியிடம் ஒப்படைக்காமல்246 பவுன் நகை மோசடி; சப்-இன்ஸ்பெக்டர் கைது

நெல்லையில் அடகு வைத்த 246 பவுன் நகையை மீட்டு வியாபாரியிடம் ஒப்படைக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். அவரது தம்பியும் போலீசில் சிக்கினார்.;

Update:2023-03-19 01:43 IST

நெல்லையில் அடகு வைத்த 246 பவுன் நகையை மீட்டு வியாபாரியிடம் ஒப்படைக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். அவரது தம்பியும் போலீசில் சிக்கினார்.

246 பவுன் நகை

நெல்லை பாளையங்கோட்டை காய்கறி தோட்ட தெருவை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (வயது 42). இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

கடந்த 2020-ம் ஆண்டு தனக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்புள்ள 246 பவுன் தங்க நகைகளை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்து இருந்தார். ஆனால் அதன்பின்னர் கொரோனா பரவல் காரணமாக வியாபாரம் போதுமானதாக இல்லை. இதனால் அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் சிரமப்பட்டார்.

திருப்பி கொடுக்காமல் மோசடி

இதையடுத்து ரமேஷ் குமார் கே.டி.சி.நகர் பாலீன் தோட்டம் பகுதியை சேர்ந்த கோமதிநாயகம் (41) என்பவரிடம் நகைகளை திருப்புவதற்கு பண உதவி செய்யுமாறு கேட்டார்.

இதையடுத்து ரமேஷ் குமார் அடகு வைத்த நகைகளை கோமதிநாயகம் திருப்பினார். ஆனால் அந்த நகைகளை ரமேஷ் குமாரிடம் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். மேலும் ரமேஷ்குமார் நகைகளை தன்னிடம் ஒப்படைக்குமாறும், அதற்கான பணத்தை தந்துவிடுவதாகவும் கூறிஉள்ளார். ஆனாலும் கோமதிநாயகம் நகைகளை கொடுக்கவில்லை. இருந்தபோதிலும் ரமேஷ்குமார் தொடர்ந்து நகைகளை கேட்டு வந்தார்.

மிரட்டல்

இதையடுத்து கோமதிநாயகம் தனது அண்ணன் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் கண்ணையாவிடம் இந்த பிரச்சினை குறித்து தெரிவித்தார்.

பின்னர் கண்ணையா, ரமேஷ்குமாரை அழைத்து நகைகளுக்காக ஏற்கனவே கொடுத்த பணத்தை வைத்துக் கொள்ள வேண்டும். நகைகளை திருப்பி கேட்கக்கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

சப்-இன்ஸ்பெக்டர் கைது

இதுகுறித்து ரமேஷ்குமார் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் கோமதிநாயகம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணையா ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அடகு வைத்த நகையை மீட்டு வியாபாரியிடம் ஒப்படைக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்