வாளையாறு அணையில் மூழ்கிகல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி
கோவை-கேரள எல்லையில் உள்ள வாளையாறு அணையில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்.;
போத்தனூர்
கோவை-கேரள எல்லையில் உள்ள வாளையாறு அணையில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள். நண்பர்களுடன் குளிக்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தனியார் கல்லூரி மாணவர்கள்
கோவை மாவட்டம் நவகரை பகுதியில் தனலட்சுமி சீனிவாசன் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால் கல்லூரி விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் 8 பேர் தமிழக-கேரள எல்லையில் உள்ள வாளையாறு அணையில் குளிக்க சென்றனர். அப்போது 3 மாணவர்கள் அணையில் இறங்கி குளிக்க தொடங்கினர். அப்போது அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் அவர்கள் 3 பேரும் தண்ணீரில் தத்தளித்தப்படி காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என்று அபய குரல் எழுப்பினர்.
ஆற்றில் மூழ்கினர்
இதனைக்கண்ட கரையில் இருந்த சக நண்பர்கள் சத்தம் போட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக வாளையாறு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதற்கிடையில் மாணவர்களின் சத்தம் கேட்டு வந்த அந்த பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் ஆற்றில் இறங்கி மாணவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது விஷ்ணுகுமார் என்ற மாணவனை பத்திரமாக மீட்டனர். ஆனால் மற்ற 2 மாணவர்களும் தண்ணீரில் மூழ்கினர்.
இதனால் அவர்களை தேடும் பணியில் அங்கிருந்தவர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மற்றும் கேரள போலீசார் ஆற்றில் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தண்ணீரில் மூழ்கி பலி
தீயணைப்பு வீரர்களின் சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 2 மாணவர்களை பிணமாக மீட்டனர். விசாரணையில் அவர்கள் பொள்ளாச்சியை சேர்ந்த திருப்பதி (வயது 18), நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சண்முகம் (18) என்பதும், இவர்கள் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரும் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கல்லூரி மாணவர்கள் அணையின் ஆழமான பகுதியில் நீந்தியபோது, கால்கள் சேற்றில் சிக்கியதால் வெளியே வர முடியாமல் தண்ணீரில் மூழ்கி இறந்ததாக தெரியவந்துள்ளது.
சோகம்
கேரள போலீசார் அணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறி கல்லூரி மாணவர்கள் குளித்ததாக தெரிகிறது. இதனால் தடையை மீறி வாளையாறு அணையில் இறங்கி குளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர். தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து படித்து வந்த மாணவர்கள் அணையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.