சுவர் இடிந்து விழுந்ததில் தனியார் நிறுவன ஊழியர் பலி
திருச்செங்கோடு அருகே சுவர் இடிந்து விழுந்ததில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.;
எலச்சிபாளையம்
தனியார் நிறுவன ஊழியர்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சூரியம்பாளையம் 7-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 57). இவர் தனது பழைய வீட்டை இடித்து புது வீடு கட்டுவதற்காக என்ஜினீயர் சங்கரிடம் கூறியிருந்தார். என்ஜினீயர் சங்கர் பழைய கட்டிடத்தை இடிக்கும் பணியை நெய்க்காரப்பட்டிபட்டியை சேர்ந்த மாதேஸ்வரனிடம் கொடுத்்தார். இந்த பணியை மாதேஸ்வரன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் வையப்பமலையைச் சேர்ந்த சுபாஷ் கோபியிடம் (30) ஒப்படைத்தார்.
இதையடுத்து நேற்று காலை வேலைக்கு வந்த சுபாஷ் கோபி முகப்பு கட்டிட பகுதியை இடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சுவரின் முன்பகுதி இடிந்து விழுந்ததில் நிலை தடுமாறி சுவர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார். வலிதாங்காமல் அவர் அலறினார்.
இடிபாடுகளுக்குள் சிக்கி பலி
இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது சுபாஷ் கோபி சுவர் இடிபாடுகளுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் திருச்செங்கோடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயங்களுடன் இருந்த சுபாஷ் கோபியை மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுபாஷ் கோபி இறந்து விட்டதாக கூறினா்.
இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சுபாஷ் கோபிக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவியும், கிருஷ்விக் என்ற 2 வயதுஆண் குழந்தையும் உள்ளனர்.
கூலி வேலைக்கு சென்ற இடத்தில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி இறந்து போன சுபாஷ் கோபியின் உடலைப் பார்த்து அவரது மனைவியும், உறவினர்களும் கதறி அழுத காட்சி அனைவரின் நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.