நவராத்திரி நிறைவு விழா

Update: 2023-10-25 18:55 GMT

ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் சபரி நகரில் அமைந்துள்ள நவசபரி அய்யப்பன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த 15-ந் தேதி முதல் கொலு அமைக்கப்பட்டு தினந்தோறும் கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகிய முப்பெரும் தேவியருக்கு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெற்று வந்தது.

தெய்வங்கள், புராண இதிகாச நாயகர்கள், குருமார்கள், தேசத்தலைவர்கள் என நமது பாரம்பரிய பண்பாட்டினை பறை சாற்றும் வகையில் அழகிய பொம்மைகளை கொண்டு கோவில் வளாகத்தில் நவராத்திரி கொலு அமைக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகளும், பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தது.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நவராத்திரி நிறைவு விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு, கோவில் குருசாமி ஜெயச்சந்திரன் தலைமையில், காலையில் கோவில் நடைதிறக்கப்பட்டு கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகத்துடன் நவசபரி அய்யப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மாலையில் நவராத்திரி சிறப்பு பூஜையும், சபரி சாஸ்தா சமிதியினரின் பஜனையும் நடைபெற்றது.

இதில் ராணிப்பேட்டை, சிப்காட் உள்பட சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஹரிவராசனம் பாடப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்