தியாகதுருகம் அருகே இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய ஓடை தண்ணீரை கடந்து செல்லும் உறவினர்கள்மேம்பாலம் அமைக்க கோரிக்கை
தியாகதுருகம் அருகே இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய ஓடை தண்ணீரை உறவினர்கள் கடந்து செல்கின்றனர்.;
தியாகதுருகம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உடையநாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட உ.புதூர் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இறந்தவர்களை இறுதி சடங்குகள் முடிவடைந்த பின் அப்பகுதியில் உள்ள ஜப்பார் ஓடையை தாண்டி, மணிமுக்தா ஆற்றங்கரை அருகே உள்ள மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்வது வழக்கம். அவ்வாறு கொண்டு செல்லும் போது, ஜப்பார் ஓடையில் ஆபத்தை உணராமல் தண்ணீரில் இறங்கி, உடலை சுமந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் உ.புதூர் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் ராஜேந்திரன் (வயது 55) என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் முடிந்ததும், அவரது உடலை இறுதி ஊர்வலமாக சுடுகாட்டிற்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.
மேம்பாலம் கட்ட நடவடிக்கை
அப்போது ராஜேந்திரனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பாடைைய இடுப்பளவு தண்ணீரில் சுமந்து சென்று அடக்கம் செய்தனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், ஒவ்வொரு முறையும் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்காக தூக்கிச் செல்லும் போது ஓடைத்தண்ணீரை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தண்ணீர் அதிகமாக வரும் போது நீந்தி செல்லும் அவல நிலையும் உள்ளது.
துக்க நிகழ்ச்சியால் ஏற்கனவே வேதனையில் இருக்கும் நாங்கள் உடலை அடக்கம் செய்ய செல்லும் போது இந்த ஓடையை கடந்து செல்வது எங்களுக்கு மேலும் வேதனை அளிப்பதாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் இனியும் காலம் தாழ்த்தாமல் ஜப்பார் ஓடையில் மேம்பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.