கேமரூன் நாட்டில் இறுதிச்சடங்கு நிகழ்வின் போது நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு
நிலச்சரிவு ஏற்பட்டு இறுதிச்சடங்கு நிகழ்வில் பங்கேற்றவர்கள் மீது மண்சுவர் இடிந்து விழுந்தது.;
Image Courtesy : AFP
யவுண்டே,
மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள கேமரூன் நாட்டின் தலைநகர் யவுண்டேவில், கனமழை காரணமாக இந்த ஆண்டு பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் அந்நகரின் உள்கட்டமைப்பு சிதைந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் அங்குள்ள 20 மீட்டர் உயரமுள்ள அணைகட்டுப் பகுதியின் அடிவாரத்தில் உள்ள மைதானத்தில் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்பகுதி மக்கள் அதில் கலந்து கொண்டிருந்தனர். அப்போது நிலச்சரிவு ஏற்பட்டு மண்சுவர் அவர்கள் மேல் இடிந்து விழுந்தது.
இதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்ததாக அப்பகுதி கவர்னர் நசெரி பால் தெரிவித்துள்ளார். மீட்பு படையினரின் உதவியுடன் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.