தென்னாப்பிரிக்கா: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 45 பேர் பலி

ஈஸ்டர் திருநாளை கொண்டாட சென்றபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Update: 2024-03-29 03:15 GMT

ஜோகன்ஸ்பெர்க் ,

தென்னாப்பிரிக்காவின் வடக்கு மாகாணமான லிம்போபோவில் உள்ள மோரியா என்ற நகரத்திற்கு, ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டத்திற்காக பயணிகளுடன் சென்ற பஸ் ஒன்று மாமட்லகலாவில் உள்ள பாலத்தை கடக்கும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், போட்ஸ்வானாவில் இருந்து லிம்போபோவில் உள்ள மோரியா என்ற நகரத்திற்கு, ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டத்திற்காக அந்த பஸ் பயணிகளை ஏற்றிச் சென்றது தெரிய வந்துள்ளது. தென்னாப்பிரிக்கா நாட்டின் மிகப்பெரிய சர்ச்களில் ஒன்றான சியோன் கிறிஸ்டியன் சர்ச்சின் தலைமையகமான மோரியாவிற்கு, அவர்கள் புனிதப் பயணம் மேற்கொண்டதாக தெரிகிறது.

விபத்தில் பஸ் முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பஸ்சின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தரையில் மோதிய வேகத்தில் பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.இதனிடையே, விபத்திற்கு தென்னாப்ரிக்கா அதிபர் சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கர்கள் வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் பொது விடுமுறையுடன் நான்கு நாட்கள் வார இறுதிக்கு தயாராகிக்கொண்டிருந்தபோது இந்த சோகம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்