புற்றுநோய் விழிப்புணர்வு: ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகம் - கனடா அரசு நடவடிக்கை

சிகரெட் பெட்டிகளில் உள்ள ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகங்கள் அச்சிட கனடா அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2023-06-01 18:15 GMT

ஒட்டாவா,

கனடாவில் பொதுமக்களிடையே சிகரெட் பயன்பாட்டை குறைக்கும் வகையில் அந்நாட்டு அரசு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அங்கு விற்பனையாகும் சிகரெட் பெட்டிகளின் மேல் சுகாதார எச்சரிக்கை வாசகம் அச்சிடப்பட்டிருக்கும் நிலையில், தற்போது ஒவ்வொரு சிகரெட்டிலும் ஒவ்வொரு எச்சரிக்கை வாசகம் அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ஒவ்வொரு சிகரெட்டிலும் புகையிலையின் புகை குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும், புகையிலை புற்றுநோய் உருவாவதற்கு ஒரு காரணம், ஒவ்வொரு புகைச்சலிலும் விஷம் உள்ளது போன்ற வாசகங்கள் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் படிப்படியாக நடைமுறைக்கு வர உள்ளது.

இதுகுறித்து கனடா நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி ஜீன் யூவ்ஸ் டுக்லோஸ் கூறுகையில், "உலக புகையிலை எதிர்ப்பு தினத்தில் புகையிலைக்கு எதிராக எச்சரிக்கை வாசக விழிப்புணர்வு திட்டத்தை அறிமுகம் செய்து, உலகின் முதல் நாடாக கனடா திகழ்கிறது. 2035-ம் ஆண்டிற்குள் புகையிலை நுகர்வு 5 சதவீதத்திற்கும் குறைவாக குறைக்கப்பட வேண்டும் என்ற கனடாவின் இலக்கின் ஒரு பகுதியாக இந்த கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்