காலக்கெடுவுக்கு முன்பே இந்திய வீரர்கள் வெளியேறிவிட்டனர்: மாலத்தீவு

இந்தியா பரிசளித்த இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் டோர்னியர் விமானங்களை இயக்கவும், பராமரிக்கவும் இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

Update: 2024-05-10 07:26 GMT

மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சு

மாலே,

மாலத்தீவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் சீன ஆதரவாளராக அறியப்படும் முகமது முய்சு வெற்றி பெற்றார். மாலத்தீவு அதிபராக பதவியேற்றது முதல் முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கடைபிடித்து வருகிறார். தேர்தல் பிரசாரத்தின் போதே, மாலத்தீவில் நிலைநிறுத்தப்பட்டுள இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை மாலத்தீவு மந்திரிகள் சிலர் இனவெறியுடன் விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவிலும் விரிசலை அதிகப்படுத்தியது. இத்தகைய சூழலில், மாலத்தீவில் முகாமிட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள் மே 10-க்குள் வெளியேற வேண்டும் என்று கெடு விதித்து இருந்தார்.

இந்த நிலையில், கெடு முடியும் முன்பே மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டு இருந்த இந்திய ராணுவ படைகள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டதாக அதிபர் முகமது முய்சுவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டு இருந்த கடைசி கட்ட இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்பட்டதாக அதிபர் மாளிகையின் தலைமை செய்தி தொடர்பாளர் ஹீனா வலீத் தெரிவித்துள்ளார்.இருப்பினும், எத்தனை வீரர்கள் கடைசி கட்டமாக வெளியேறினார்கள் என்பது குறித்த தகவலை அவர் வெளியிடவில்லை. மாலத்தீவில் நிறுத்தப்பட்டு இருந்த வீரர்களின் எண்ணிக்கை பற்றிய விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்