லண்டனுக்கு தப்பியோடிய பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மகன் நாடு திரும்பினார்

ஊழல் வழக்கில் சிக்கி லண்டனுக்கு தப்பியோடிய பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மகன் நேற்று நாடு திரும்பினார்.

Update: 2022-12-11 22:30 GMT

கோப்புப்படம்

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் மகன் சுலைமான் ஷெஹ்பாஸ். கடந்த 2018-ம் ஆண்டு இம்ரான்கான் பிரதமராக இருந்தபோது இவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து அவரை கைது செய்ய வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் சுலைமான் ஷெஹ்பாஸ் நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தஞ்சம் புகுந்தார்.

இதற்கிடையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் இம்ரான்கான் பதவி பறிக்கப்பட்டு ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்குகளின் விசாரணை மந்தமாகின.

இந்த சூழலில் ஊழல் வழக்கில் சுலைமான் ஷெஹ்பாசை கைது செய்வதற்கு இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தடை விதித்தது. அதே சமயம் இந்த வழக்கில் ஜாமீன் பெற 13-ந் தேதிக்குள் அவர் கோர்ட்டில் சரணடைய வேண்டும் எனவும் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் லண்டனுக்கு தப்பியோடிய 4 ஆண்டுகளுக்கு பிறகு சுலைமான் ஷெஹ்பாஸ் நேற்று நாடு திரும்பினார். விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், தன் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், எனவே தனது பாதுகாப்பிற்காக பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்