உலக அமைதிக்காக 27-ந்தேதி பிரார்த்தனை - போப் பிரான்சிஸ் அழைப்பு

27-ந்தேதி உலக அமைதிக்கான பிரார்த்தனைக்கு போப் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2023-10-18 13:46 GMT

ரோம்,

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ், உலக அமைதிக்கான பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-

"அக்டோபர் 27-ந்தேதியை(வெள்ளிக்கிழமை) உலக அமைதிக்கான பிரார்த்தனை, தவம் மற்றும் நோன்பின் நாளாக அறிவிக்க முடிவு செய்துள்ளேன். உலக அமைதியையே தமது இதயத்தின் நோக்கமாக கொண்டிருக்கும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களும் இந்த பிரார்த்தனையில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

போர் எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது. அது மரணத்தையும் அழிவையும் மட்டுமே விதைக்கிறது. வெறுப்பையும், பழிவாங்கும் உணர்வையும் அதிகரிக்கிறது. போர் எதிர்காலத்தை அழிக்கிறது. இந்த மோதலில் ஒரு பக்கத்தை மட்டுமே எடுத்துக்கொள்ளுமாறு விசுவாசிகளை நான் அறிவுறுத்துகிறேன். அது சமாதானத்தின் பக்கம். அதை வார்த்தையின் மூலமாக இல்லாமல், பிரார்த்தனையின் மூலம் செய்யுங்கள்.

காசாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஒரு மனிதாபிமான பேரழிவை தவிர்க்க தயவு செய்து உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள். மோதல் விரிவடைவது கவலையளிக்கிறது. ஆயுதங்கள் மவுனமாகட்டும். அமைதிக்கான முழக்கம் ஏழைகளிடமிருந்தும், மக்களிடமிருந்தும், குழந்தைகளிடமிருந்தும் கேட்கட்டும்!"

இவ்வாறு போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். 



Tags:    

மேலும் செய்திகள்