லெபனானில் அகதிகள் முகாமில் வன்முறை; 6 பேர் பலி

லெபனானில் அகதிகள் முகாமில் ஏற்பட்ட வன்முறைக்கு 6 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2023-09-14 01:21 GMT

பெய்ரூட்,

லெபனான் நாட்டில் 10-க்கும் மேற்பட்ட அகதிகள் முகாம்கள் உள்ளன. இவற்றில் ஒன்றான சிடான் என்ற துறைமுக நகரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அகதிகள் முகாமில் மோதல்கள் ஏற்பட்டு உள்ளன.

ஐன் எல்-ஹில்வெ என்ற இந்த முகாம், பதா இயக்கத்தினரால் நடத்தப்படுகிறது. இதன் தலைவர் கடந்த ஜூலை மாத இறுதியில் முகாமில் பலியானார்.

அவரை மர்ம நபர்கள் சுட்டு கொன்றுள்ளனர் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலையில், முகாமில் அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த 7-ந்தேதி முதல் முகாமில் மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.

இந்த மோதலில் ஆயுதமேந்திய போராளிகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடக்கத்தில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து முகாமில் இருந்து நூற்றுக்கணக்கானோர் தப்பி வெளியேறி வருகின்றனர்.

அவர்களில் பலர் உள்ளூர் மசூதிகள், பள்ளிகள் மற்றும் சிடான் நகராட்சி கட்டிடம் ஆகியவற்றில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த மோதல் சம்பவத்தில் 6 பேர் பலியாகி உள்ளதாகவும், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், லெபனானில் 55 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட அகதிகள் உள்ளனர் என ஐ.நா. அமைப்பு தெரிவிக்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்