நெல்மணிக்கு பதிலாக பால் பாயசம்

கேரள மாவட்டம் ஆலப்புழாவில் உள்ள அம்பலப்புழயை ஆண்ட அரசனுக்கு, சதுரங்க விளையாட்டில் ஆர்வம் அதிகம் இருந்தது.

Update: 2017-08-01 01:30 GMT
கேரள மாவட்டம் ஆலப்புழாவில் உள்ள அம்பலப்புழயை ஆண்ட அரசனுக்கு, சதுரங்க விளையாட்டில் ஆர்வம் அதிகம் இருந்தது. அத்துடன் தன்னை யாரும் சதுரங்க விளையாட்டில் வெல்ல முடியாது என்கிற கர்வமும் அவனிடம் அதிகமாக இருந்தது.

இந்நிலையில் ஒரு நாள், வயதான துறவி ஒருவர் அவனது அரசவைக்கு வந்திருந்தார். அவரை வரவேற்று விருந்தளித்த அரசன் அவரிடம், தன்னுடைய சதுரங்க விளையாட்டுப் பெருமையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தான். தொடர்ந்து, இந்தச் சதுரங்க விளையாட்டில் தன்னை யாரும் தோற்கடிக்க முடியாது என்றும் சொன்னான்.

உடனே துறவி, ‘மன்னா! சதுரங்க விளையாட்டில் நீ திறமையானவன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது நாமிருவரும் சேர்ந்து சதுரங்கம் விளையாடலாமா?’ என்று கேட்டார். அரசனும் அதற்குச் சம்மதித்தான்.

அரசன் அந்தத் துறவியிடம், ‘இந்தப் போட்டியில் நான் வெற்றி பெற்றால், எனக்குப் பரிசாகத் தர உங்களிடம் என்ன இருக் கிறது?’ என்று கேட்டான்.

‘மன்னா! துறவியான என்னாலும் உனக்கு நல்ல பரிசைத் தர முடியும். ஒருவேளை.. இந்தச் சதுரங்கப் போட்டியில் நான் வெற்றி பெற்று விட்டால், நீ எனக்கு என்ன பரிசு தருவாய்’ என்றார் துறவி.

அதற்கு அரசன், ‘சுவாமி! இந்தப் போட்டியில் நான்தான் வெற்றியடைவேன். நீங்கள் சொல்வது போல் ஒரு வேளை நீங்கள் வெற்றி பெற்று விட்டால், நீங்கள் கேட்கும் பரிசை வாங்கிக் கொள்ளலாம்’ என்றான்.

துறவியோ, ‘மன்னா! எனக்குப் பரிசாகப் பெரிதாக எதுவும் தர வேண்டாம். சதுரங்கத்தில் இருக்கும் 64 கட்டங்களுக்கும் நெல்மணிகளைப் பரிசாகத் தந்தால் போதும்’ என்றார்.

மன்னனுக்கு ஆச்சரியம்.. ‘பரிசுப் பொருளாக வெறும் 64 நெல்மணிகள் உங்களுக்குப் போதுமா?’ என்று கேட்டான்.

‘மன்னா! துறவியான எனக்கு இந்தப் பரிசு போதும். சதுரங்கக் கட்டத்தில் முதல் கட்டத்திற்கு ஒரு நெல்மணி தர வேண்டும். இரண்டாவது கட்டத்தில் இரண்டு, மூன்றாவது கட்டத்தில் நான்கு, நான்காவது கட்டத்தில் பதினாறு, ஐந்தாவது கட்டத்தில் 256 என்று அதன் மடங்கு களாகத் தர வேண்டும் அவ்வளவுதான்’ என்றார் துறவி.

அரசன் இந்த ஆட்டத்தில் தான் வெற்றி பெற்று விடுவோம் என்கிற கர்வத்தில் சிறிதும் சிந்திக்காமல் அதற்கு ஒப்புக் கொண்டான்.

போட்டி தொடங்கியது. சில மணி நேரத்தில் அந்தத் துறவி சதுரங்க ஆட்டத்தில் வெற்றியடைந்தார். அரசன் துறவியிடம் தோல்வியடைந்ததை நினைத்து வருந்தினான். பின்னர் அவன் துறவிக்கு நெல்மணிகளைப் பரிசாகக் கொண்டு வந்து தரும்படி உத்தரவிட்டான்.  

முதல் கட்டத்திற்கு ஒரு நெல்மணி, இரண்டாவது கட்டத்தில் இரண்டு, மூன்றாவது கட்டத்தில் நான்கு, நான்காவது கட்டத்தில் பதினாறு என்று பெருக்கி நெல்மணிகளை வழங்கிக் கொண்டேயிருந்தான். சில கட்டங்களுக்குள் அவனுடைய களஞ்சியத்திலிருந்த நெல்மணிகள் அனைத்தும் காலியாகி விட்டன. அடுத்த சில கட்டங்களுக்கு அருகிலிருந்த அரசர்களிடம் கடனாகப் பெற்று நெல்லை வழங்கினான். அப்படியும், தொடர்ந்து நெல்மணி களைத் தரமுடியாத நிலை ஏற்பட்டது.   

அப்போதுதான் மன்னனுக்கு தன்னுடைய தவறு புரிந்தது. துறவியின் காலில் விழுந்த அவன், தன்னால் சொன்ன பரிசைத் தர முடியவில்லை என்று சொல்லி மன்னிப்பு கேட்டான்.

அப்போது, துறவி மறைந்து அங்கி கிருஷ்ணர் காட்சியளித்தார். ‘மன்னா! உன்னிட மிருக்கும் விளையாட்டுத் திறனைப்  பெரிதாக நினைத்துக் கர்வம் கொண்ட உனக்கு நல்வழி காட்டவே நான் இங்கு வந்தேன். எனக்கு இன்று நீ பட்ட கடனை உடனடியாக அடைக்க வேண்டாம். சிறிது சிறிதாக அடைத்தால் போதும். அம்பலப்புழாவிலிருக்கும் எனது கோவிலுக்கு வந்து வழிபடுபவர்களுக்கு அரிசியில் செய்யப்பட்ட பால் பாயசத்தை வழங்கிக் கொண்டே இரு. அது போதும்’ என்று சொல்லிவிட்டு மறைந்தார்.

இந்த தல வரலாறு அம்பலப்புழாவில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் நடந்ததாகும். இப்போதும் இந்த ஆலயம் தினமும் பால் பாயசம் நைவேத்தியமாக படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்