பக்தனின் ஆசையை நிறைவேற்றிய முருகன்

விராலிமலை சாலையை ஒட்டியே அமைந்துள்ளது விராலிமலை சுப்பிரமணிய சுவாமி ஆலயம். ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூலவர் வள்ளி- தெய்வானையுடன் சிரித்த முகத்துடன் அருள்பாலிக்கிறார்.

Update: 2018-01-02 04:56 GMT
தேவக்கோட்டத்தில் துர்க்கை, தட்சிணாமூர்த்தி, விசுவநாதர், விசாலாட்சி, ஆகியோர் திருமேனிகள் உள்ளன. பிரகாரத்தில் மூலகணபதி, சண்டிகேசுவரர், நவக்கிரக நாயகர்கள், வீரபாகு, காலபைரவர், அருணகிரிநாதர் சன்னிதிகள் உள்ளன.

இங்குள்ள வீரபாகுவின் திருமேனி ஐந்து அடி உயரத்திற்கு மேல் இருப்பது நாம் எந்த ஆலயத்திலும் காணாத காட்சி ஆகும். பாதி மலையேறியதும் இடும்பர் கடம்பர் சன்னிதி உள்ளது.

சுருட்டு நிவேதனம்

குமாரவாடி என்ற ஜமீனில் நிர்வாகியாகப் பணி புரிந்தவர் கருப்பமுத்து பிள்ளை, வெள்ளிக் கிழமை தோறும் முருகப்பெருமானை தரிசித்த பின்பே உண்ணும் வழக்கம் உடையவர் இந்த தீவிர முருக பக்தர்.

வழக்கம் போல் முருகப்பெருமானை தரிசிக்க ஒரு நாள் விராலிமலை வந்தார் கருப்பமுத்துப் பிள்ளை. வானம் இருண்டு மழை பொழிய தொடங்கியது. ஒரு மேட்டுப் பாங்கான இடத்தில் தங்கினார். மழை விடுவதாக இல்லை. கனமழை கொட்டியது. வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இரவு வந்தது மழை விட்டபாடில்லை.

நீண்ட நேரமாக காத்திருந்ததில் அவருக்கு பசிக்கத் தொடங்கியது. பசியைப் போக்க உணவில்லை. முருகப்பெருமானையும் தரிசிக்க முடியவில்லை. புகைக்கு ஒரு சுருட்டு கூட இல்லையே என வருந்தினார் அவர்.

பக்தனின் வேதனையை உணர்ந்த முருகன் அவர் முன் தோன்றினார். அவருக்கு சுருட்டும் நெருப்பும் கொடுத்து அவருடைய மனவேதனையை போக்கினார். கருப்ப முத்துப்பிள்ளைக்கு மனமெல்லாம் மகிழ்ச்சி. மறுநாள் வெள்ளம் வடிந்து விராலிமலை முருகன் ஆலயம் சென்ற அவர் அங்கு இருந்தவர்களிடம் முதல் நாள் நடந்த சம்பவத்தைக் கூறினார். அனைவருக்கும் வியப்பு.

அத்துடன் முருகப்பெருமானுக்கு சுருட்டையே நிவேதனமாக வைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். அவரது விருப்பப்படி அன்று முதல் மாலை பூஜையின் போது சுருட்டு நிவேதனமாக வைக்கப்படுகிறது. படைத்த பின் பக்தர்களுக்கு அதை பிரசாதமாகத் தருகின்றனர்.

அருணகிரி நாதருக்கு மலைமீதுள்ள சந்தான கோட்டம் என்ற மண்டபத்தில் காட்சி தந்து அவருக்கு அஷ்டமா சக்திகளையும் அருளினார் முருகன். அருணகிரி நாதர் இத்தலத்தில் 16 திருப்புகழ் பாடல்களைப் பாடியுள்ளார்.

தெற்கு குடகு சாமி என்ற சதாசிவ சுவாமிகள், எச்சில் பொறுக்கி ஆறுமுக சுவாமிகள் போன்ற சித்தர்கள் வாழ்ந்த தலம் இது.

மன்னரின் வயிற்று வலி

சுருட்டுடன் தொடர்புடைய இன்னொரு கதையும் உண்டு.

புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் ஒரு முறை விராலிமலை வந்தார். சுருட்டை நிவேதனமாக வைப்பது கண்டு திடுக்கிட்ட மன்னர் இனி சுருட்டை நிவேதனப் பொருளாக வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டுவிட்டு சென்றுவிட்டார். அன்று மாலை அரண்மனை திரும்பிய மன்னருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. எந்த மருத்துவமும் பலன் தரவில்லை.

ஒரு நாள் அவர் கனவில் தோன்றிய முருகன் தனக்கு சுருட்டை நிவேதனமாக வைக்க வேண்டாம் என்று கூறியதால் தான் அவருக்கு வயிற்று வலியை தோன்ற செய்தேன் என்று கூற மறுநாள் முதல் சுருட்டு நைவேத்தியமாக முருகனுக்கு வைக்க மன்னரின் வயிற்று வலி குணமானது.

திருவிழாக்கள்

பொதுவாக ஆலயங்களில் பிரமோச்சவம் என்பது ஒரு தடவை மட்டுமே நடக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் விசாகம் மற்றும் பூசம் விழாக்களை ஒட்டி இரண்டு பிரம்மோச்சவம் நடைபெறுகிறது.

கந்த சஷ்டி இங்கு 6 நாட்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாத கார்த்திகைகள், பங்குனி உத்திரம் போன்ற நாட்களும் இங்கு திருவிழா நாட்களே.

ஜனவரி முதல் நாள் மற்றும் சித்திரை முதல் நாள் இங்கு திருப்புகழ் திருப்படித் திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மலையில் நிறைய விராலி மரங்கள் காணப்பட்டதாலும், தல விருட்சமாக விராலி மரம் உள்ளதாலும் இந்த ஊருக்கு விராலிமலை என்ற பெயர் வந்திருக்கலாம் எனக் கூறுகின்றனர்.

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருப்பான் என்பார்கள். இந்த குன்றின் மேல் வாசம் செய்யும் முருகன் தன் பக்தர்களை அரவணைத்து காப்பதில் நிகரற்றவன் என்பது உண்மையே.

திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில் திருச்சியில்இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது விராலிமலை.

- ஜெயவண்ணன்

நாரதர் பெற்ற சாப விமோசனம்

சிவபெருமான் பிரம்மாவின் 5 தலைகளில் ஒன்றை கொய்தார். இதன் காரணமாக பிரம்மாவின் புதல்வனான நாரதர், சிவபெருமான் மீது கோபம் கொண்டார். இதனால் சிவன், நாரதருக்கு சாப மிட்டார். தன் தவறை உணர்ந்த நாரதர், விராலி மலை சென்று முருகனை தரிசித்து பாவ விமோசனம் வேண்டினார். இன்றும் நாரதரின் ஐம்பொன் உற்சவர் சிலை இந்த ஆலயத்தில் உள்ளது.

மேலும் செய்திகள்