ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளாவை வீழ்த்தி ஒடிசா அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்

இன்று நடைபெறும் 2-வது நாக்-அவுட் சுற்றில் எப்.சி. கோவா - சென்னையின் எப்.சி. அணிகள் கோவாவில் மோதுகின்றன.

Update: 2024-04-19 21:06 GMT

image courtesy: Indian Super League twitter

புவனேஸ்வர்,

10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடரில் புவனேஸ்வரில் நேற்று இரவு நடந்த முதலாவது நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணியும் கோல் எதுவும் அடிக்கவில்லை. 67-வது நிமிடத்தில் கேரளா வீரர் பெடோர் செர்னிச் கோல் அடித்து தங்கள் அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். 87-வது நிமிடத்தில் ஒடிசா வீரர் டியாகோ மவுரிசியோ பதில் கோல் திருப்பினார்.

வழக்கமான நேரத்தில் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியதால் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. இதில் 98-வது நிமிடத்தில் ஒடிசாவின் இசக் வன்லால்ருட்பேலா கோல் அடித்தார். அதுவே வெற்றியையும் தீர்மானிப்பதாக அமைந்தது. முடிவில் ஒடிசா 2-1 என்ற கோல் கணக்கில் கேரளாவை வெளியேற்றி அரைஇறுதிக்கு முன்னேறியது.

இன்று நடைபெறும் 2-வது நாக்-அவுட் சுற்றில் எப்.சி. கோவா - சென்னையின் எப்.சி. அணிகள் கோவாவில் மோதுகின்றன. லீக் சுற்றில் இவ்விரு அணிகளும் ஏற்கனவே 2 முறை மோதின. இரு ஆட்டத்திலும் கோவாவே வெற்றியை சுவைத்தது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்