சென்னை கோரமண்டல் உள்பட 3 ரெயில்கள் மோதலில் பலி... ... ஒடிசாவில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் 137 தமிழக பயணிகள் வருகை

சென்னை கோரமண்டல் உள்பட 3 ரெயில்கள் மோதலில் பலி எண்ணிக்கை 288 ஆக உயர்வு

பாலசோர்,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில் விபத்தில் சிக்கின.

அதிக வேகத்தில் சென்று கொண்டிருந்தபோது நிகழ்ந்த இந்த திடீர் விபத்தால், ரெயில் பெட்டிகள் ஒன்றுக்கொன்று மோதி உருக்குலைந்தன. ஒன்றின் மீது மற்றொன்று ஏறி நின்றன, ஒன்றுக்குள் ஒன்று ஊடுருவி சிதைத்தன.

தடம்புரண்ட 10-க்கும் மேற்பட்ட ரெயில் பெட்டிகள் நொறுங்கி விட்டன.

288 பேர் உயிரிழப்பு

விபத்தில் சிக்கிய 3 ரெயில்களில் 2 ரெயில்கள் பயணிகள் ரெயில் என்பதால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இடிபாடுகளில் சிக்கினார்கள். இதில் பலர் சம்பவ இடத்திலேயே அடுத்தடுத்து உயிர் இழந்தனர்.

இதுவரை மொத்தம் 288 பயணிகள் இறந்தது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் 50-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

நாட்டில் இதுவரை நிகழ்ந்துள்ள மிகப்பெரிய ரெயில் விபத்துகளில் ஒன்றாக இந்த விபத்தும் வரலாற்றில் இடம் பிடித்து விட்டது.

மீட்புப்பணி

நேற்று முன்தினம் இரவு விபத்து நடந்த சில நிமிடங்களில் மீட்பு பணிகளும் தொடங்கப்பட்டன.

உள்ளூர் மக்கள் தொண்டுள்ளத்துடன் தொடங்கிய இந்த மீட்பு பணிகளில் மாநில போலீசார், தீயணைப்பு படையினர், மாநில-தேசிய பேரிடர் மீட்புப்படை என பெரும் படையே இணைந்து பம்பரமாக சுழன்று மீட்பு பணிகளை மேற்கொண்டது.

சுமார் 200 ஆம்புலன்ஸ்கள், 50 பஸ்கள், 45 நடமாடும் மருத்துவக்குழுக்கள், 1,200-க்கு மேற்பட்ட மீட்புக்குழுவினர் என பெரிய குழுவினரே அசுர வேகத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

இந்த மிகப்பெரிய மீட்புப்பணிகளில் விமானப்படையும் உதவிக்கரம் நீட்டியது. படுகாயமடைந்த பயணிகளை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக 2 ஹெலிகாப்டர்களை வழங்கி இருந்தது.

ராட்சத கிரேன்கள்

ரெயில் பெட்டிகளின் இடிபாடுகளை கியாஸ் கட்டர்கள் உள்ளிட்ட நவீன உபகரணங்களுடன் வெட்டி, அதில் சிக்கிய பயணிகளை மீட்புக்குழுவினர் மீட்டனர். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவ்வாறு போர்க்கால அடிப்படையில் நடந்த இந்த மீட்புப்பணிகள் நேற்று மாலையில் முடிவடைந்தன. அதைத்தொடர்ந்து விபத்தில் சிக்கிய ரெயில் பெட்டிகளை அப்புறப்படுத்தி தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் நடந்தன.

இதற்காக ராட்சத கிரேன்கள் மற்றும் புல்டோசர்கள் என ஏராளமான எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த சீரமைப்பு பணிகள் நேற்று இரவிலும் நீடித்தன.

விபத்து நடந்த பகுதியில் தண்டவாளங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. எனவே அவற்றை சீரமைத்து அந்த வழியாக ரெயில் போக்குவரத்தை விரைவில் தொடங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தூக்கி எறியப்பட்டோம்

விபத்துக்குள்ளான பெட்டிகள் நொறுங்கி கிடப்பதையும், அவற்றில் இருந்து பயணிகள் மீட்கப்படுவதையும் டிரோன் மூலம் படம் பிடிக்கப்பட்டு நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்தன.

இந்த காட்சிகள் பார்ப்போரின் நெஞ்சை பதறவைக்கும் வகையில் இருந்தன.

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தை சேர்ந்த பிஜூஷ் போட்டர், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் தமிழகத்துக்கு வந்து கொண்டிருந்தார். அவர் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

விபத்து குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘விபத்து நிகழ்ந்தபோது மிகப்பெரிய சத்தம் கேட்டது. இதைக்கேட்டு நாங்கள் திடுக்கிட்டோம். நாங்கள் இருந்த ரெயில் பெட்டி திடீரென ஒரு பக்கம் திரும்புவதைப் பார்த்தோம். ரெயிலின் வேகத்தால் எங்களில் பலர் பெட்டியிலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்டோம். நாங்கள் தவழ்ந்து வெளியே வந்தபோது, சுற்றிலும் உடல்கள் கிடப்பதைக் கண்டோம்’ என அதிர்ச்சி மாறாமல் கூறினார்.

பிரதமர் மோடி நேரில் ஆய்வு

இந்த நிலையில் ரெயில் விபத்து நடந்த பகுதிக்கு பிரதமர் மோடி நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அரை மணி நேரத்துக்கு மேல் அங்கு இருந்த மோடி, விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் காயம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ள பாலசோர் ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

முன்னதாக இந்த விபத்து தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக டெல்லியில் உயர்மட்டக்குழு கூட்டம் ஒன்றை பிரதமர் மோடி நடத்தினார். இதில் உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மொழி தெரியாமல் அவதி

இதற்கிடையே விபத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட பயணிகள் பாலசோர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் வெளிமாநிலத்தவர் என்பதால் மொழி தெரியாமல் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

இந்த பயணிகளுக்கு அதிக அளவு ரத்தம் தேவைப்படும் என்பதால், ரத்த தானம் செய்வதற்காக போலீசாரும், உள்ளூர் மக்களும் ஆஸ்பத்திரிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். பயணிகளுக்கு உதவுவதற்காகவும், ரத்த தானத்துக்காகவும் பாலசோர் மருத்துவக்கல்லூரியில் மட்டுமே 2 ஆயிரத்துக்கு மேற்பட்டார் வரிசையில் நிற்பதை பார்க்கும்போது மனிதாபிமானத்தின் உச்சம் தெரிந்தது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆஸ்பத்திரியின் பிணக்கிடங்கில் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பெரும்பாலான உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்மட்ட விசாரணை

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ரெயில்வே அமைச்சகம் அறிவித்து உள்ளது. பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதைப்போல உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் மோடியும் அறிவித்து உள்ளார்.

உலகையே உலுக்கியுள்ள இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தென்கிழக்கு வட்டத்தின் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் சவுத்ரி தலைமையிலான குழுவினர் இந்த விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Update: 2023-06-03 22:12 GMT

Linked news