ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் கீழ், ஈரானில் இருந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-06-2025
ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் கீழ், ஈரானில் இருந்து 290 இந்தியர்கள் சிறப்பு விமானத்தில் நேற்றிரவு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு உள்ளனர். டெல்லியில் உள்ள சர்வதேச இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அவர்களை மத்திய வெளிவிவகார அமைச்சக செயலாளர் அருண் குமார் சாட்டர்ஜி வரவேற்றார். மாணவர்கள், புனித யாத்திரை சென்றவர்கள் உள்பட பலரும் பாதுகாப்பாக வந்திறங்கினர். இதற்காக அவர்கள் மத்திய அரசுக்கு மனப்பூர்வ நன்றியை தெரிவித்து கொண்டனர்.
இதற்காக, இந்திய தூதரகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. இந்தியர்கள் பாதுகாப்பாக 5 நட்சத்திர ஓட்டல்களிலும் தங்க வைக்கப்பட்டனர். அதன்பின்னர், இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர்.
இதுபற்றி மீட்கப்பட்டவர்களில் சிலர் கூறும்போது, விரைவாகவும், பாதுகாப்பாகவும் எங்களை சொந்த நாட்டுக்கு அழைத்து வந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றனர். ஈரானில் நிலைமை நல்ல முறையில் இல்லை என்று எங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். இந்திய தூதரகமும் மற்றும் நம்முடைய தூதரும் இந்தியர்களை வெளியேற்றும் நடைமுறையை பாதுகாப்பாகவும் மற்றும் சுமுக முறையிலும் செய்து முடித்தனர் என்று அவர்கள் கூறினர்.