காமன்வெல்த் 2022 : லான் பவுல்ஸ் போட்டியில் தங்க பதக்கம் வென்று வரலாறு படைத்தது இந்திய மகளிர் அணி
லான் பவுல்ஸ் போட்டியில் முன்னணி அணிகளை வீழ்த்தி இந்திய அணி சாதனை படைத்து இருக்கிறது.;
Image Courtesy : @Media_SAI
பர்மிங்காம்,
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை மூன்று தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்றுள்ளது.
4-வது நாளான நேற்று காமன்வெல்த் போட்டியில் லான் பவுல்ஸ் விளையாட்டில் இந்திய மகளிர் அணி இறுதி போட்டிக்குள் முதல் முறையாக நுழைந்து வரலாறு படைத்து இருந்தது.
லவ்லி சௌபே , பிங்கி, நயன்மோனி சைகியா மற்றும் ரூபா ராணி டிர்கி அடங்கிய இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றனர். இந்த நிலையில் இந்த நால்வர் கொண்ட அணி இன்று நடந்த இறுதி போட்டியில் அனுபவம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி 17-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்க பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. இந்த விளையாட்டில் முன்னணி அணிகளை வீழ்த்தி இந்திய அணி சாதனை படைத்து இருக்கிறது. காமன்வெல்த் போட்டியில் இந்த விளையாட்டில் இந்திய அணி வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும். இதன் மூலம் இந்திய அணியின் பதக்க எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.