தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தொடக்கம்
கொடியேற்றத்தைத் தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.;
தென்காசி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசி திருவிழா, ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய திருக்கல்யாண திருவிழா ஆகிய விழாக்கள் வெகு விமரிசையாக 10 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தொடங்கியது. உலகம்மன் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து கொடி மரத்திற்கு மஞ்சள், சந்தனம், மா பொடி, திரவியம், இளநீர், பால், தயிர் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் 13ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறும். தொடர்ந்து 15 ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேலாக காசி விஸ்வநாதர் உலகம்மனுக்கு தபசு காட்சி கொடுத்த பின்னர், இரவு 9.10 மணிக்கு மேல் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இவ்விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் கட்டளைதாரர்களும் செய்து வருகின்றனர்.