வாயை பொத்தியபடி போட்டோவுக்கு போஸ்... ஜெர்மனி அணியினர் நூதன போராட்டம்
வீரர்கள் ஓரின சேர்க்கையாளர்களுக்கான தங்களது ஆதரவை வேறு விதமாக வெளிப்படுத்தி வருகிறார்கள்.;
Image Courtesy : AFP
தோகா,
உலககோப்பை கால்பந்து நடக்கும் வளைகுடா நாடான கத்தாரில் ஓரின சேர்க்கை என்பது சட்டவிரோதமாகும். தற்போது உலக கோப்பை கால்பந்தில் விளையாடும் சில நாடுகள் ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், 'ஒன் லவ்' என்ற பெயரில் வானவில் நிறத்தில் பட்டை அணிந்து விளையாட முடிவு செய்தன. ஆனால் அவ்வாறு அணிந்து விளையாடுவது நடத்தை விதி மீறல். கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சர்வதேச கால்பந்து சம்மேளனம் எச்சரித்தது.
இதையடுத்து வீரர்கள் ஓரின சேர்க்கையாளர்களுக்கான தங்களது ஆதரவை வேறு விதமாக வெளிப்படுத்தி வருகிறார்கள். ஈரான் அணியினர் தங்களது முதல் ஆட்டத்தில் தேசியகீதம் இசைக்கப்பட்ட போது, பாடலை பாட மறுத்தனர்.
இந்த நிலையில் ஜெர்மனி அணியினர் நேற்று ஜப்பானுக்கு எதிரான ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக மைதானத்தில் தங்களது வாயை பொத்தியபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்து கவனத்தை ஈர்த்தனர். 'வானவில் பட்டையை அணிவதற்கு தடை விதிப்பது எங்களது பேச்சுரிமையை பறிப்பதற்கு சமமாகும். இந்த விவகாரத்தில் எங்களது நிலைப்பாட்டில் மாற்றமில்லை' என்று ஜெர்மனி கால்பந்து சம்மேளனம் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளது. அதே சமயம் ஜெர்மனி உள்துறை மந்திரி நான்சி பாசிர் வானவில் பட்டையை கையில் கட்டிக்கொண்டு உலக கோப்பை போட்டியை கண்டுகளித்தார்.