தொழிலில் வெற்றியடைந்ததால் திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கம் நன்கொடை
ரூ.140 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்கத்தை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நன்கொடையாக வழங்க பக்தர் ஒருவர் முன்வந்துள்ளார்.;
திருமலை,
ஆந்திர மாநிலம் மங்களகிரியில் நடந்த ‘வறுமை ஒழிப்பு' திட்ட நிகழ்ச்சியில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
திருப்பதி வெங்கடாஜலபதியின் பக்தர் ஒருவர் தனது தொழிலில் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, நன்றி தெரிவிக்கும் விதமாக சுமார் ரூ.140 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்கத்தை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளார். சாமியின் சிலைக்கு ஒரு நாளைக்கு சுமார் 120 கிலோ எடையுள்ள தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்படுவதை அறிந்த, அந்த பக்தர் 121 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்க முன்வந்தார். தனது நிறுவன பங்குகளில் 60 சதவீதத்தை விற்று சுமார் ரூ.6 ஆயிரம் கோடி முதல் ரூ.7 ஆயிரம் கோடி வரை சம்பாதித்து உள்ளார். வெங்கடேஸ்வர சுவாமி அந்த செல்வங்களை அவருக்கு வழங்கியதால், அதை ஏழுமலையானுக்கு திருப்பித்தர முடிவு செய்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் சந்திரபாபு நாயுடு பேசும்போது அந்த பக்தரின் பெயரை குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.