பஸ் சக்கரத்தில் சிக்கிய வாலிபரின் கால் முறிந்தது

கோட்டுச்சேரி மார்க்கெட் அருகே பஸ் விபத்தில் சக்கரத்தில் சிக்கிய வாலிபரின் கால் முறிந்தது

Update: 2023-05-31 17:27 GMT

கோட்டுச்சேரி

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் மண்மலைத் தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது 32). இவர் கோட்டுச்சேரிக்கு ஒரு வேலையாக வந்து விட்டு பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது காரைக்காலிலிருந்து வந்த பஸ் ஒன்று கோட்டுச்சேரி மார்க்கெட்டில் பயணிகளை இறக்கி விட்டுவிட்டு புறப்பட்டது.

அந்த பஸ்சின் முன்பக்க வாசல் வழியாக தினேஷ் ஏற முயன்றார். அதை கவனிக்காமல் கண்டக்டர் பரசுராமன் (47) விசில் அடிக்கவும், டிரைவர் நிரவி காமராஜர் தெருவைச் சேர்ந்த பிரபாகரன் (51) பஸ்சை இயக்கினார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த தினேஷின் இடது காலில் பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் அவரது கால் முறிந்தது. காயம் அடைந்த அவர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் பிரபாகரன், கண்டக்டர் பரசுராமன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்