சாராயத்தில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி சாவு

புதுவையில் இறைச்சி வாங்க மனைவி பணம் தராததால் சாராயத்தில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-10 17:10 GMT

கோட்டுச்சேரி

இறைச்சி வாங்க மனைவி பணம் தராததால் சாராயத்தில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

பணம் கொடுக்க மறுப்பு

மயிலாடுதுறை மாவட்டம் கார்குடியைச் சேர்ந்தவர் சந்திரபோஸ் (வயது 62). விவசாய கூலித்தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர், அடிக்கடி மனைவி ராதாவுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கமாம். நேற்று மது போதையில் வந்தவர், மனைவியிடம் ஆட்டிறைச்சி வாங்குவதற்காக பணம் கேட்டுள்ளார்.

ஆனால் அதற்கு ராதா, தன்னிடம் பணம் இல்லை என்று கூறி இருக்கிறார். இதனால், அவரிடம் சண்டைபோட்டு கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிய சந்திரபோஸ், காரைக்கால் மாவட்டம் நெடுங்காட்டை அடுத்த நல்லாத்தூர் சாராயக்கடைக்கு சென்றார்.

விஷம் கலந்து குடித்து தற்கொலை

அங்கு சாராயத்தில் விஷம் கலந்து குடித்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் வாயில் நுரைதள்ளியவாறு தரையில் சாய்ந்தார். தகவல் அறிந்து வந்த மனைவி ராதா, அங்கு வாயில் நுரை தள்ளியவாறு கிடந்த சந்திரபோசை மீட்டு நெடுங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து நெடுங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்