விபி-ஜிராம்ஜி திட்டத்தை ரத்து செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

மாநில அரசிற்கு கூடுதல் நிதி சுமையை மத்திய அரசு ஏற்றியுள்ளது என மு.வீரபாண்டியன் விமர்சித்துள்ளார்.;

Update:2026-01-19 15:50 IST

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

“நாடு முழுவதும் ஊரகப் பகுதிகளில் உள்ள உடல் உழைப்புத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்கள் ஆண்டுக்கு 100 நாள் சட்டபூர்வ வேலை பெறும் உரிமை வழங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை பா.ஜ.க. மத்திய அரசு கடந்த 2025 டிசம்பர் 16-ந்தேதி நீக்கி விட்டு, விபி-ஜிராம்ஜி சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

இதன் மூலம் 15 கோடி குடும்பங்களில் உள்ள 26 கோடி தொழிலாளர்களின் வேலை பெறும் உரிமையை பறித்து, அவர்களது வாழ்வாதாரத்தை நிலை குலைத்துள்ளது. தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள், அதன் மாநில சட்டமன்ற தேர்தலை எதிர் கொண்டுள்ள நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை நீக்கியிருப்பதும், பெரும்பான்மை மதச்சார்பு நிலையில் இருந்து விபி-ஜிராம்ஜி சட்டத்தை நிறைவேற்றியிருப்பதும் சமூக நல்லிணக்க சூழலுக்கு கேடு விளைவிக்கும் நோக்கம் கொண்டதாகும்.

மாநில அரசின் அதிகாரத்தையும், கிராம ஊராட்சிகளுக்கு அரசியலமைப்பு சட்டம் உறுதி செய்துள்ள உரிமைகளையும் தன்னிச்சையாக பறித்துக் கொள்ளும் மத்திய அரசு, கூட்டாட்சி கோட்பாடுகளை தகர்த்து, மாநில அரசுகளின் உரிமைகளை தொடர்ந்து பறித்து வருகிறது. ஜி.எஸ்.டி. சட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் நிதி ஆதாரத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது.

100 நாள் வேலை திட்ட ஊதியத்திற்கு வழங்க வேண்டிய நிதி உட்பட பல துறைகளுக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்து நிர்ப்பந்திப்பது என்ற நிலையில் விபி-ஜிராம்ஜி சட்டத்தின் மூலம் 40 சதவீத நிதியை ஏற்க வேண்டும் என மாநில அரசிற்கு கூடுதல் நிதி சுமையை ஏற்றியுள்ளது.

மத்திய அரசின் எதேச்சதிகார செயலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு, கேரள முதல்-அமைச்சர்கள், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். கர்நாடக சட்டமன்றம் சிறப்பு விவாதம் நடத்துவதாக அறிவித்துள்ளது. தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்கு வங்கம் சுப்ரீம் கோர்ட்டில் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது. நாடு முழுவதும் கிராமப்புற தொழிலாளர்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாளை (20.01.2026) கூடும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தில் விபி-ஜிராம்ஜி சட்டத்தை ரத்து செய்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை மேலும் வலுப்படுத்தி, மீண்டும் செயல்படுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்