புதுச்சேரியில் இன்று முதல் 144 தடை உத்தரவு

144 தடை உத்தரவு வாக்களிக்க வருபவர்களுக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-16 19:42 GMT

கோப்புப்படம்

புதுச்சேரி,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய புதுவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான குலோத்துங்கன், "புதுவை எம்.பி. தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை நடக்கிறது. வேட்பாளர்களின் பிரசாரம் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

ஓட்டுக்காக பணம், பரிசுப்பொருள் கொடுப்பதை தடுக்க 72 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கான பணியில் 6 ஆயிரத்து 428 அரசு ஊழியர்கள ஈடுபடுத்தப்படுகின்றனர். 211 நுண்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதுவை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவையொட்டி, அதாவது இன்று (புதன்கிழமை) மாலை 6 மணி முதல் 20-ந் தேதி காலை 6 மணிவரை புதுச்சேரி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வாக்களிக்க வருபவர்களுக்கு பொருந்தாது.

தியேட்டர்களில் நாளை (வியாழக்கிழமை) இரவு காட்சியும், நாளை மறுநாள் முழுநேரமும் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது" என்று அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்