தீ விபத்தில் 5 வீடுகள் எரிந்து சேதம்


தீ விபத்தில் 5 வீடுகள் எரிந்து சேதம்
x

கோட்டுச்சேரியில் தீ விபத்தில் 5 வீடுகள் எரிந்ததில் பெண் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.

கோட்டுச்சேரி

கோட்டுச்சேரி அருள்பிள்ளை வீதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 60). இவரது வீட்டின் அருகில் உள்ள கருவேலமரங்களை மர்மநபர்கள் யாரோ தீ வைத்து கொளுத்தி விட்டனர். இந்த தீ அங்கிருந்த மூங்கில் புதரில் பற்றி எரிந்து காற்றில் பறந்து, அங்குள்ள ஜெயக்குமார் (42) என்பவரது வீட்டின் மீது விழுந்து தீப்பற்றியது. அப்போது காற்று வேகமாக வீசியதால் அடுத்தடுத்த வீடுகளுக்கு தீ பரவியது. உடனே வீடுகளில் இருந்தவர்கள் அலறி அடித்தபடி வெளியே ஓடிவந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த காரைக்கால் தீயணைப்பு அதிகாரி மாரிமுத்து தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 3 வாகனங்களில் விரைந்து சென்று தீயை அணைத்தனர். சுரக்குடி தீயணைப்பு நிலைய வீரர்களும் அங்கு வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் சம்பூரணம் (39), சுமதி (35), ராஜாத்தி (50) ராஜலட்சுமி (50) ஆகியோரின் வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. சேத மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும். தீ விபத்தில் மாலதி (50), மணிகண்டன் (18) ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story