பல்கலைக்கழக மாணவி மீது தாக்குதல்


பல்கலைக்கழக மாணவி மீது தாக்குதல்
x

புதுச்சேரி முதலியார்பேட்டையில் பல்கலைகழக மாணவி மீது தாக்குதல் நடத்திய தம்பதியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

புதுச்சேரி

புதுவை முதலியார்பேட்டை தமிழ்த்தாய் நகரை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் வினோதினி (வயது 26). சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கிலம் படித்து வருகிறார். கடந்த 17-ந்தேதி காணும் பொங்கல் அன்று தனது வீட்டின் முன்பு கோலம் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த ஜனார்த்தனனின் மனைவி மங்கள லட்சுமி அவரது வீட்டு வாசலில் கோலம் போட தண்ணீர் ஊற்றியபோது, அந்த தண்ணீர் வினோதினி போட்ட கோலத்திற்கும் வந்தது. இதை பார்த்த அவர் கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மங்கள லட்சுமி, அவரது கணவர் ஜனார்த்தனன் ஆகியோர் சேர்ந்து வினோதினியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர்.

புகாரின் பேரில் முதலியார் பேட்டை போலீசார் கணவன், மனைவி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story