புதுச்சேரி: மின்துறையை தனியார்மயமாக்கும் முடிவு - போராட்டத்தில் ஈடுபட்ட மின்துறை ஊழியர்கள் கைது


புதுச்சேரி: மின்துறையை தனியார்மயமாக்கும் முடிவு - போராட்டத்தில் ஈடுபட்ட மின்துறை ஊழியர்கள் கைது
x

மின்துறையை தனியார்மயமாக்கும் முடிவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மின்துறை ஊழியர்களை துணை ராணுவம் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயமாக்கும் முடிவை அரசு எடுத்துள்ளது. புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்கும் வகையில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மின் பழுது நீக்குதல், கட்டணம் வசூல், மின்அளவீடு செய்தல் போன்ற அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் மின்சாரம் தடை ஏற்பட்டு அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். நேற்று மாலை 5 மணி முதல் இரவு வரை மின்சாரம் தடைபட்டதால் மாநிலம் முழுவதும் இருளில் மூழ்கியது. இதை கண்டித்து தீப்பந்தம் ஏந்தியும், தடைகளை ஏற்படுத்தியும் பல இடங்களில் பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இரவு 9 மணிக்கு மேல் ஒவ்வொரு பகுதியாக மின்வினியோகம் சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் 5-வதுநாளாக மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்றும் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் அந்தந்த பகுதியில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மின்துறை ஊழியர்களால் மின்வெட்டு ஏற்படுமானால் மத்திய அரசின் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தின் (எஸ்மா) கீழ் நடவடிக்கை பாயும் என்று தெரியவந்துள்ளது. மின் துறையை தனியார் மயமாக்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மின் துறையை தனியார் மயமாக்கும் முடிவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை துணை ராணுவம் மற்றும் போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story