பிரதமர் மோடிக்கு, சபாநாயகர் செல்வம் நேரில் அழைப்பு
புதுச்சேரியில் அமைக்கப்படும் தியாக சுவர் திறப்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு, சபாநாயகர் செல்வம் அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பை ஏற்று விழாவில் கலந்துகொள்வதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
புதுச்சேரி
புதுச்சேரியில் அமைக்கப்படும் தியாக சுவர் திறப்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு, சபாநாயகர் செல்வம் அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பை ஏற்று விழாவில் கலந்துகொள்வதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
சந்திப்பு
நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா என்ற பெயரில் கொண்டாடும் வகையில் புதுச்சேரி அரசு மற்றும் சக்ரா விஷன் இந்தியா பவுண்டேஷன் சார்பில் புதுவை கடற்கரை சாலையில் 100 அடி உயர தேசியக்கொடி கம்பமும், 1,000 சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய குறிப்புகளுடன் கூடிய தியாக சுவர் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த தியாக சுவரில் சுதந்திர போராட்ட வீரர் பற்றிய முதல் குறிப்பு கல்லை பிரதமர் மோடியை புதுச்சேரி சபாநாயகர் செல்வம் நேரில் சந்தித்து வழங்கினார்.
பிரதமர் வருகை
அப்போது அவர் புதுச்சேரி மாநிலத்தில் அமைக்கப்பட்டு வரும் தியாக சுவர் மற்றும் 100 அடி உயர தேசியக்கொடி கம்பத்தை திறந்து வைக்க வருகை தருமாறு பிரதமருக்கு, சபாநாயகர் செல்வம் அழைப்பு விடுத்தார். இதை ஏற்று புதுச்சேரிக்கு நிச்சயம் வருகை தந்து தியாக சுவரை திறந்து வைப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்தார்.
மேலும் அவர், இந்தியாவில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு திறக்கப்பட உள்ள தியாகச்சுவர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் எனவும், தியாக சுவர், கொடிக்கம்பம் அமைக்க தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் வாக்குறுதி அளித்தார்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் பெறப்பட்டு குஜராத்தில் அமைக்கப்பட்டு உள்ள ஒருமைப்பாடு சிலையான சர்தார் வல்லபாய் படேல் சிலையை போன்று சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்த இடங்களில் இருந்து மண் எடுத்து வந்து தியாக சுவரில் கலந்து கட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி தனது கருத்தை தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, சக்ரா விஷன் இந்தியா பவுண்டேஷன் நிறுவன தலைவரும், திரைப்பட இயக்குனருமான ராஜசேகரன், பா.ஜ.க. மாநில பொருளாதார பிரிவு அமைப்பாளர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.