குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
மரக்காணம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மரக்காணம்
மரக்காணம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
மரக்காணம் அருகே கந்தாடு ஊராட்சி பிளாரிமேட்டு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு வரும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த கிராமத்துக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், இன்று காலிக்குடங்களுடன் கந்தாடு பஸ்நிறுத்தம் அருகே மரக்காணம்- திண்டிவனம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பேசி உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.
இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.