சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது


சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
x

புதுவையில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

வானூர்

புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, வானூர் அருகே உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்திருந்தார். இந்த நிலையில் சிறுமிக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது தாயார், சிறுமியை சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார். சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவள் 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், இது குறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சிறுமியிடம் நடத்திய விசாரணையில், வானூர் அருகே சேமங்கலம் பகுதியை சேர்ந்த அப்பு என்கிற அலெக்சாண்டர் (வயது 21) என்பவர் சிறுமியிடம் நட்பாக பழகி, உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்புவை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


Next Story