ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்.. பா.ஜ.க. கூட்டணி தேர்தல் அறிக்கை


ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்.. பா.ஜ.க. கூட்டணி தேர்தல் அறிக்கை
x

தொகுதி பங்கீட்டு ஒப்பந்தப்படி, தெலுங்கு தேசம் கட்சி 144 சட்டமன்ற தொகுதிகளிலும், 17 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

அமராவதி:

ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறுகிறது. மே 13ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி, ஜன சேனா கட்சி மற்றும் பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இக்கூட்டணியின் (தேசிய ஜனநாயக கூட்டணி) தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

அதில், ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்தால் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும், வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அறிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ஜனசேனா தலைவர் பவன் கல்யாண், இந்த தேர்தல் அறிக்கையானது தனது கட்சியின் சண்முக வியூகம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் சூப்பர் சிக்ஸ் ஆகியவற்றின் கலவை என குறிப்பிட்டார்.

தெலுங்கு தேசம் கட்சி இதற்கு முன்னர் சூப்பர் சிக்ஸ் என்ற பெயரில், பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு 15,000 ரூபாய் உதவித் தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவில் மொத்தம் 175 சட்டமன்ற தொகுதிகள், 25 மக்களவை தொகுதிகள் உள்ளன. தொகுதி பங்கீட்டு ஒப்பந்தப்படி, தெலுங்கு தேசம் கட்சி 144 சட்டமன்ற தொகுதிகளிலும், 17 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. பா.ஜ.க. 10 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 6 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஜனசேனா கட்சிக்கு 2 மக்களவை தொகுதி, 21 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.


Next Story