மறக்க முடியாத மனிதர்-நடிகர்: “அஜித்துடன் 5-வது முறையாக இணைந்தால், அது வரம்” - டைரக்டர் சிவா பேட்டி


மறக்க முடியாத மனிதர்-நடிகர்: “அஜித்துடன் 5-வது முறையாக இணைந்தால், அது வரம்” - டைரக்டர் சிவா பேட்டி
x
தினத்தந்தி 5 Jan 2019 11:30 PM GMT (Updated: 5 Jan 2019 10:37 PM GMT)

அஜித்துடன் 5-வது முறையாக இணைந்தால், அது வரம் என டைரக்டர் சிவா தெரிவித்துள்ளார்.


நடிகர் அஜித்குமாரும், டைரக்டர் சிவாவும் இதுவரை ‘வீரம்,’ ‘வேதாளம்,’ ‘விவேகம்,’ ‘விஸ்வாசம்’ ஆகிய 4 படங்களில் கதாநாயகனாகவும், டைரக்டராகவும் இணைந்து பணிபுரிந்து இருக்கிறார்கள். இதில், ‘விஸ்வாசம்’ படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.

இதுபற்றி டைரக்டர் சிவா, ‘தினத்தந்தி’ நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு டைரக்டர் சிவா அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ‘விஸ்வாசம்’ என்ற பட ‘டைட்டில்’க்கு பொருத்தமாக படத்தில் என்ன சொல்லியிருக்கிறீர்கள்?

பதில்:- கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் உரிய விஸ்வாசத்தை மட்டும் படத்தில் சொல்லவில்லை. உலகில் உள்ள அனைவருக்குள்ளும் ‘விஸ்வாசம்’ இருக்க வேண்டும் என்ற கருத்தை சொல்லியிருக்கிறேன். இந்த ‘டைட்டில்’ எல்லோருக்கும் பொதுவானது.

கேள்வி:- படத்தின் கதை என்ன? அஜித், நயன்தாரா இருவரும் என்ன கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறர்கள்?

பதில்:- தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞராக அஜித் நடித்து இருக்கிறார். அந்த மண்ணின் மைந்தராக-மதுரை தமிழ் பேசி நடித்துள்ளார். படத்தின் கதை 2 கால கட்டங்களில் நடக்கிறது. அதில், நிரஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து இருக்கிறார். மும்பை, தேனி ஆகிய 2 இடங்கள் தொடர்பான காட்சிகளில் அவர் வருவார்.

கேள்வி:- இதில், அரசியல் இருப்பதாக பேசப்படுகிறதே...?

பதில்:- இது, அரசியல் படம் அல்ல. குடும்பப்பாங்கான ‘மாஸ்’ படம்.

கேள்வி:- பேட்ட, விஸ்வாசம் ஆகிய 2 படங்களும் ஒரே தேதியில் ‘ரிலீஸ்’ ஆவதால் ரஜினிகாந்த், அஜித்குமார் ஆகிய 2 பேர் ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் மோதிக்கொள்கிறார்களே?

பதில்:- ரசிகர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எந்த வகையிலும் மோதக்கூடாது. ரசிகர்கள் திரைப்படங்களை கொண்டாடுபவர்களாக இருக்க வேண்டும். அப்படி கொண்டாடினால், சந்தோஷம் இரட்டிப்பாகும்.

கேள்வி:- உங்கள் படங்களில் சண்டை காட்சிகள் ரசனையுடன் அமைந்து இருக்கும். ‘விஸ்வாசம்’ படத்தில் எப்படி?

பதில்:- என் படங்களில், சண்டை காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த படத்திலும் அந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

கேள்வி:- அஜித்துடன் தொடர்ந்து 4 படங்களில் பணிபுரிந்து இருக்கிறீர்கள். 5-வது முறையாகவும் இருவரும் இணைவீர்களா?

பதில்:- அஜித், ஒரு நல்ல மனிதர். சிறந்த நடிகர். அவரை வைத்து 4 படங்களை இயக்கியதில், சந்தோஷம். ஐந்தாவதாக மேலும் ஒரு படத்தில் இணைந்தால், அது வரம்.

கேள்வி:- ஒவ்வொரு படம் முடியும்போதும் படக்குழுவினருக்கு அஜித் விருந்து கொடுப்பார்...அவரே கைப்பட பிரியாணி செய்து பரிமாறுவார் என்று சொல்வார்கள். ‘விஸ்வாசம்’ படத்திலும் அது நடந்ததா?

பதில்:- அது, நிறைய முறை நடந்தது. 250 பேர்களை கொண்ட படக்குழுவினர் அனைவருக்கும் அஜித் பிரியாணி தயாரித்து பரிமாறினார்.”

இவ்வாறு டைரக்டர் சிவா கூறினார்.



Next Story