“சமந்தாவை வைத்து படம் இயக்க ஆசை” இயக்குனர் சுசீந்திரன் பேட்டி


“சமந்தாவை வைத்து படம் இயக்க ஆசை” இயக்குனர் சுசீந்திரன் பேட்டி
x
தினத்தந்தி 10 Dec 2019 11:54 PM GMT (Updated: 10 Dec 2019 11:54 PM GMT)

‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு இயக்குனராக அறிமுகமானவர், சுசீந்திரன்.

 ‘நான் மகான் அல்ல,’ ‘அழகர்சாமி குதிரை,’ ‘மாவீரன் கிட்டு,’ ‘ஜீவா,’ ‘ராஜபாட்டை’ உள்பட பல படங்களை டைரக்டு செய்து இருக்கிறார். இவர் டைரக்டு செய்துள்ள புதிய படமான ‘சாம்பியன்’ விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதையொட்டி இயக்குனர் சுசீந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“சாம்பியன், நான் இயக்கும் 14-வது படம். பழிவாங்கும் திகில் படமாக தயாராகி இருக்கிறது. வட சென்னை மக்கள் என்றாலே வன்முறையில் ஈடுபடுபவர்கள் என்ற எண்ணத்தை இந்த படம் மாற்றும். அங்கேயும் விளையாட்டில் ஆர்வம் உள்ள சாம்பியன்கள் இருக்கிறார்கள் என்பதை சொல்லும் படம், இது. அவர்கள் எப்படியெல்லாம் வேறு பாதையில் சிதறடிக்கப்படுகிறார்கள் என்பது, படத்தின் திரைக்கதை.

கதாநாயகன் விஷ்வா கால்பந்து வீரராக வருவார். இவருக்கும், முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களுக்கும் ஒரு வருடம் கால்பந்து பயிற்சி அளிக்கப்பட்டது. கதாநாயகிகளாக மிருணாளினி, சவும்யா ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள்.

அடிப்படையில், எனக்கு விளையாட்டுகள் மீது ஆர்வம் அதிகம். அதனால்தான் தொடர்ந்து விளையாட்டுகளை மையப்படுத்தி படங்களை இயக்குகிறேன். “பெண் கதாபாத்திரங்களை முதன்மைப்படுத்தி படம் எடுப்பீர்களா?” என்று என்னிடம் கேட்கிறார்கள். 200 சதவீதம் தமிழ் பேசும் நடிகைகளை முதன்மைப்படுத்தி படம் எடுக்க ஆசை. சமந்தா, மிருணாளினி போன்றவர்கள் தமிழ் நடிகைகள்தான். அவர்களை வைத்து படம் இயக்க விரும்புகிறேன். அடுத்து சூர்யா அல்லது கார்த்தியை வைத்து படம் இயக்க முடிவு செய்து இருக்கிறேன்.” இவ்வாறு இயக்குனர் சுசீந்திரன் கூறினார்.

Next Story