கொரோனா எதிரொலி: விருத்தாசலம் செராமிக் தொழிற்சாலையில் விற்பனை மந்தம்


கொரோனா எதிரொலி: விருத்தாசலம் செராமிக் தொழிற்சாலையில் விற்பனை மந்தம்
x
தினத்தந்தி 16 Oct 2020 4:11 AM GMT (Updated: 16 Oct 2020 4:11 AM GMT)

கொரோனா எதிரொலியால் விருத்தாசலம் செராமிக் தொழிற்சாலையில் நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனை மந்தமாகியது.

விருத்தாசலம்,

பீங்கான் அலங்கார பொருட்களுக்கும், வீட்டு உபயோக பொருட்களுக்கும் தற்போது மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. மக்களின் வாங்கும் சக்தியும், வீட்டை அலங்காரப்படுத்துவதில் ஆர்வம் அதிகரித்து வருவதாலும் பல்வேறு வகைகளில் பீங்கான் பொம்மைகள் வடிவமைக்கப்பட்டு சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளன. அந்த வகையில் பீங்கான் பொம்மைகள் தற்போது விருத்தாசலம் செராமிக் தொழிற்சாலையில் அதிகளவு தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. இந்த தொழிற்சாலையில் அகல் விளக்குகள், டீ கப், வாட்டர் பில்டர், ஹீட்டர், சாமி பொம்மைகள், தலைவர்களின் உருவங்கள், பறவைகள், தாவரங்கள், பீஸ் கேரியர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட அலங்காரம் மற்றும் பயன்பாட்டிற்கான பொருட்கள் பல்வேறு வடிவங்களில் பல வண்ணங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலமாக இப்பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் நாடு முழுவதும், இன்று(வெள்ளிக்கிழமை) முதல் நவராத்திரி கொலு திருவிழா தொடங்க உள்ளது. இந்த திருவிழாவிற்கு தேவையான பீங்கான் பொம்மைகள் விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் இருந்து, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும். மேலும் தீபாவளி, கார்த்திகை தீப திருவிழாவுக்கு தேவைப்படும் பீங்கான் பொம்மைகளும் ஏற்றுமதி செய்யப்பட்டது.ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் நோயால் கடந்த 6 மாதங்களாக உற்பத்தி மூலப்பொருட்கள் கிடைக்காததாலும், உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டதாலும் திருவிழாக்காலங்களில் பல்வேறு மாநிலங்களில் இருந்து படையெடுத்து வரும் வியாபாரிகள் கூட்டம் இன்றி விருத்தாசலம் செராமிக் அலங்கார பொருட்கள் விற்பனை கூடங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன.

இதுகுறித்து பீங்கான் பொம்மைகள் உற்பத்தியாளர் கிருஷ்ணராஜ் கூறுகையில், இங்கு 400-க்கும் மேற்பட்ட உற்பத்திக் கூடங்கள் அமைந்துள்ளன. இந்த தொழிலில் நான் கடந்த 25 வருடங்களாக ஈடுபட்டு வருகிறேன். கடந்த 24 வருடங்களாக இது போன்ற ஒரு இழப்பீட்டை சந்தித்ததே இல்லை. தற்போது கடந்த 6 மாதமாக பொருட்கள் உற்பத்தி இல்லை. இதே நிலை நீடித்தால் அடுத்தடுத்த தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படும். மேலும் கடன் வாங்கிதான் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறோம். ஏற்கனவே வாங்கிய கடனுக்கு கூட வட்டி கட்ட முடியாமல் உள்ளது. ஏற்கனவே உற்பத்தி செய்த பொருட்கள் தேக்கம் அடைந்து விட்டது. என்னை போன்ற உற்பத்தியாளர்கள் நவராத்திரி திருவிழாவை மட்டுமே குறிக்கோளாக கொண்டு உற்பத்தி செய்து வருகிறோம். ஆனால் தற்போது நவராத்திரி பொம்மைகள் அனைத்தும் தேக்கம் அடைந்து விட்டது. ஒரு ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய்க்கு பீங்கான் பொம்மைகள் விற்பனை ஆகும். ஆனால் இந்த ஆண்டு உற்பத்தி பாதிப்பால் 1.5 லட்சம் அளவில்தான் பொருட்களே இருக்கிறது. ஆனால் அதனை கூட வாங்குவதற்கு மக்களோ, வியாபாரிகளோ வரவில்லை என கவலையுடன் தெரிவித்தார்.

செராமிக் உற்பத்தியாளர் கவிதா கூறுகையில், இங்கு உற்பத்தி செய்யப்படும் அகல் விளக்குகள், பொம்மைகள் உள்ளிட்ட அனைத்து பீங்கான் உற்பத்தி பொருட்களும் விலை சரிவடைந்து உள்ளது. மேலும் கொரோனாவால் கடந்த 6 மாதங்களாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உற்பத்தி செய்த செலவை எடுக்க முடியாமல் திண்டாடி வருகிறோம். இதே நிலை நீடித்தால் நஷ்டத்திற்கு உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் அரசு செராமிக் உற்பத்தி பொருட்களுக்கு லாபமான விலையை நிர்ணயம் செய்து செராமிக் பொருட்களின் உற்பத்திக்கான மூலப் பொருட்களையும் தயார் செய்து தர வேண்டும் என்றார்.

செராமிக் அலங்கார பொருட்கள் விற்பனையாளர் சரவணன் கூறுகையில், கொரோனாவால் ரெயில், பஸ் போக்குவரத்து இல்லாததாலும், வெளியூர், வெளி மாநில வியாபாரிகள் வராததாலும் விற்பனை நிலையங்கள் வெறுச்சோடி காணப்படுவதுடன், விற்பனையும் படுமந்தாமாகி விட்டது. வழக்கமாக 100 வியாபாரிகள் வந்த நிலையில், தற்போது 30 வியாபாரிகள் வருகின்றனர். 40, 50 ஆண்டுகளாக குடிசை தொழில் செய்பவர்களிடம் மொத்தமாக உற்பத்தி பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்தோம். ஆனால் தற்போது விற்பனை மந்தமானதால் எங்களிடம் இருக்கும் பொருட்களையும் விற்பனை செய்ய முடியவில்லை. நாங்கள் பொருட்களை வாங்காததால், குடிசை தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த நேரத்தில் அரசு மின்சார கட்டண சலுகை, மூலப்பொருட்களுக்கான வரி ஆகிய சலுகைகளை செய்ய வேண்டும். அரசு செராமிக் தொழிலாளர்கள் மீது கருணை காட்டாவிட்டால் இந்த தொழிலுடன், தொழிலாளர்களும் பெரும் அழிவை சந்திப்பார்கள் என்றார்.

Next Story