ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணி த்ரில் வெற்றி


ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணி த்ரில் வெற்றி
x
தினத்தந்தி 10 April 2019 2:19 PM GMT (Updated: 10 April 2019 8:25 PM GMT)

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது.

மும்பை,

8 அணிகள் இடையிலான 12–வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 24–வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்புடன் மோதியது. மும்பை கேப்டன் ரோகித் சர்மா காயத்தால் அவதிப்படுவதால் அவருக்கு பதிலாக கீரன் பொல்லார்ட் கேப்டன் பொறுப்பை ஏற்றார். அந்த அணியில் சித்தேஷ் லாட் அறிமுக வீரராக இடம் பிடித்தார்.

பஞ்சாப் அணியில் இரு மாற்றமாக மயங்க் அகர்வால், முஜீப் ரகுமான் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக கருண் நாயர், ஹர்டஸ் வில்ஜோன் சேர்க்கப்பட்டனர். ‘டாஸ்’ ஜெயித்த மும்பை பொறுப்பு கேப்டன் பொல்லார்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி கிறிஸ் கெய்லும், லோகேஷ் ராகுலும் பஞ்சாப் அணியின் இன்னிங்சை தொடங்கினர். அவசரம் காட்டாமல் நிதானமாக ஆடிய இவர்கள் முதல் 4 ஓவர்களில் 20 ரன் மட்டுமே எடுத்தனர். அதன் பிறகு வாணவேடிக்கை ஆரம்பித்தது. 5–வது ஓவரில் பெரேன்டோர்ப்பின் பந்து வீச்சில் கெய்ல் 3 சிக்சர்களை பறக்க விட்டு அசத்தினார். லோகேஷ் ராகுலும் அதிரடி காட்ட, ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 10.2 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது. விசுவரூபம் எடுத்த இந்த ஜோடி ஸ்கோர் 116 ரன்களை எட்டிய போது பிரிந்தது. ரசிகர்களுக்கு விருந்து படைத்த கெய்ல் 63 ரன்களில் (36 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்) ஆட்டம் இழந்தார்.

கெய்ல் வெளியேறியதும் அடுத்த சில ஓவர்களில் ரன்வேகம் தளர்ந்தது. டேவிட் மில்லர் 7 ரன்னிலும், கருண் நாயர் 5 ரன்னிலும், சாம் குர்ரன் 8 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள். 9 ரன்களுக்கு மேலாக எகிறிய ரன்ரேட்டும் அதற்கு கீழ் வந்தது.

இந்த சூழலில், மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய லோகேஷ் ராகுல் கடைசி 2 ஓவர்களில் பின்னியெடுத்தார். 19–வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யாவின் பந்து வீச்சில் ராகுல் 3 சிக்சரும், ஒரு பவுண்டரியும் சாத்தினார். தொடர்ந்து பும்ராவின் கடைசி ஓவரில் ஒரு பந்தை சிக்சருக்கு தூக்கிய ராகுல் ஆட்டம் நிறைவடைய 2 பந்து எஞ்சியிருந்த போது ஐ.பி.எல்.–ல் தனது கன்னி சதத்தை எட்டினார். பஞ்சாப் அணிக்காக ஒரு வீரர் சதம் அடிப்பது இது 11–வது நிகழ்வாகும்.

20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்தது. லோகேஷ் ராகுல் 100 ரன்களுடனும் (64 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்), மன்தீப்சிங் 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

அடுத்து 198 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை அணி ஆடியது.  20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய பொல்லாட்  10 சிக்ஸ் மற்றும் 3 பவுண்டரி உதவியுடன் 83 ரன்கள எடுத்து  வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

Next Story