ஐ.பி.எல். கிரிக்கெட்: 4-வது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி “சாம்பியன்”


ஐ.பி.எல். கிரிக்கெட்: 4-வது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி “சாம்பியன்”
x
தினத்தந்தி 12 May 2019 6:09 PM GMT (Updated: 12 May 2019 8:57 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் 1 ரன்கள் வித்தியாசத்தில், சென்னையை வீழ்த்தி 4-வது முறையாக மும்பை அணி “சாம்பியன்” பட்டம் வென்றது. #MIvsCSK

ஐதராபாத்,

டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடைப்பெற்றது.

இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில், டி காக், ரோகித் சர்மா ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினர். சிறந்த துவக்கம் தந்த இந்த ஜோடியில் டி காக் 29(17) ரன்களும், ரோகித் சர்மா 15(14) ரன்களும் எடுத்திருந்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவுடன், இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். ஓரளவு ரன் சேர்த்த இந்த ஜோடியில் சூர்யகுமார் யாதவ் 15(17) ரன்களும், இஷான் கிஷன் 23(26) ரன்களும், அடுத்து களமிறங்கிய குருணால் பாண்டியா 7(7) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 6-வது விக்கெட்டுக்கு பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.

இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இந்த ஜோடியில் ஹர்திக் பாண்டியா 16(10) ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ராகுல் சாஹர், மெக்லானகன் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து வெளியேறினர்.

இறுதியில் பொல்லார்டு 41(25) ரன்களும், பும்ரா (0) ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக  தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் சென்னை அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் சார்பில் டூ பிளஸ்சிஸ், ஷேன் வாட்சன் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் அதிரடி காட்டிய டூ பிளஸ்சிஸ் 26(13) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 8(14) ரன்களும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அம்பத்தி ராயுடு 1(4) ரன்னிலும், கேப்டன் டோனி 2(8) ரன்னிலும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாட்சன் 44 பந்துகளில் தனது அரை சதத்தினை பதிவு செய்தார். அடுத்ததாக களமிறங்கிய பிராவோ 15(15) ரன்களில் கேட்ச் ஆனார். கடைசி ஓவரில் ஷேன் வாட்சன் 80(59) ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. முடிவில் ஷர்துல் தாகூர் 2 (2)ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் ஜடேஜா 5(5) ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் சென்னை அணி 20 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா 2 விக்கெட்டுகளும், குர்ணால் பாண்ட்யா, மலிங்கா, ராகுல் சாஹர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் 1 ரன்கள் வித்தியாசத்தில், சென்னையை வீழ்த்தி 4-வது முறையாக மும்பை அணி “சாம்பியன்” பட்டம் வென்றது.


Next Story