‘கேப்டன் பதவி பறிப்பு குறித்து கடைசி நேரத்தில் தான் என்னிடம் தெரிவிக்கப்பட்டது’ - விராட் கோலி வேதனை


‘கேப்டன் பதவி பறிப்பு குறித்து கடைசி நேரத்தில் தான் என்னிடம் தெரிவிக்கப்பட்டது’ - விராட் கோலி வேதனை
x
தினத்தந்தி 16 Dec 2021 2:20 AM GMT (Updated: 16 Dec 2021 2:20 AM GMT)

இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவி பறிப்பு குறித்து கடைசி நேரத்தில் தான் தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாக விராட் கோலி வேதனையுடன் கூறினார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 26-ந்தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது. 

தென்ஆப்பிரிக்காவுக்கு தனி விமானத்தில் புறப்படுவதற்கு முன்பாக விராட் கோலி நேற்று காணொலி வாயிலாக மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:-

தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி கடந்த 8-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அதற்கு 1½ மணி நேரத்திற்கு முன்பாக இந்திய அணியின் தேர்வு கமிட்டியினர் என்னை தொடர்பு கொண்டு ஆலோசித்தனர். அப்போது டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் விவரத்தை நானும், தேர்வு கமிட்டி தலைவரும் (சேத்தன் ஷர்மா) ஏற்றுக் கொண்டோம். 

இறுதியாக, இனி ஒரு நாள் போட்டி அணியின் கேப்டனாக நான் தொடர முடியாது என்று 5 பேர் கொண்ட தேர்வு கமிட்டியினர் முடிவு செய்திருப்பதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. 

அதற்கு நான், ‘அப்படியா...நல்லது’ என்று பதிலளித்தேன். அதாவது டெஸ்ட் அணித் தேர்வுக்கு பிறகு தான் ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டதே தவிர, அதற்கு முன்பு வரை கிரிக்கெட் வாரியம் தரப்பில் இருந்து இது குறித்து யாரும் என்னிடம் பேசவில்லை.

நாங்கள் ஐ.சி.சி. உலக கோப்பையை வெல்லாததும் என்னை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதற்கு காரணமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்கிறேன். எனவே கிரிக்கெட் வாரியத்தின் முடிவு சரியா? தவறா? என்ற விவாதம் தேவையில்லை.

இவ்வாறு விராட் கோலி கூறினார்.

Next Story