சண்டைக் கோழி விராட்... கங்குலியின் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி..!!


சண்டைக் கோழி விராட்... கங்குலியின் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி..!!
x
தினத்தந்தி 19 Dec 2021 6:33 AM GMT (Updated: 19 Dec 2021 6:56 AM GMT)

விராட் கோலியின் அணுகுமுறை எனக்கு பிடிக்கும். ஆனால் அவர் நிறைய சண்டையிடுவார் என்று பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

உலக கோப்பை போட்டிக்கு முன்பு 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகினார். அதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டி கேப்டன் பதவியும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. கேப்டன் பதவி விவகாரத்தில் விராட் கோலிக்கும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவர் கங்குலிக்கும் இடையே மோதல் இருப்பதாக தகவல் பரவியது. 

இதனிடையே டி20 கேப்டன் பதவியை விட்டு விலக வேண்டாம் என்று விராட் கோலியிடம் கூறியதாக கங்குலி கூறினார். ஆனால் தம்மிடம் அப்படி யாரும் கூறவில்லை என்று பத்திரிகையாளர் சந்திப்பில் விராட் கோலி கூறினார். இதனால் கங்குலி பொய் கூறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இருவரும் மாறுபட்ட கருத்தை சொன்னதால் குழப்பம் இருப்பது தெளிவாக தெரிந்தது. 

இதனையடுத்து விராட் கோலியின் கேப்டன் பதவி விவகாரத்தில் கங்குலி விளக்கம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கபில்தேவ் மற்றும் மதன் லால் ஆகியோர் வலியுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கங்குலியிடம், “ எந்த வீரரின் நடத்தையும் செயல்பாடும் உங்களுக்கு பிடிக்கும்?” என்று கேள்வி எழுப்பபட்டது. இதற்கு சற்றும் யோசிக்காத கங்குலி, ‘விராட் கோலியின் நடத்தை மற்றும் களத்தில் அவரது செயல்பாடு எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவர் நிறைய சண்டையிடுவார்’ என்று கூறினார். கங்குலியின் இந்த பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இதனையடுத்து மன அழுத்தத்தை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும் கங்குலியிடம் கேள்வி கேட்கப்பட்டது, இதற்கு முன்னாள் இந்திய கேப்டன் மிகவும் கிண்டலான பதிலை அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “வாழ்க்கையில் மன அழுத்தம் இல்லை. மனைவியும் காதலியும் தான் மன அழுத்தத்தை கொடுக்கிறார்கள்” என்று அவர் கூறினார். 

இதற்கிடையே கோலியின் கேப்டன் பதவி விவகாரம் தொடர்பாக அதிகம் கருத்து தெரிவிக்க கங்குலி மறுத்துவிட்டார். மேலும் பிசிசிஐ அதைச் சமாளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

Next Story