ஐ.பி.எல். கிரிக்கெட்: 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி..!


ஐ.பி.எல். கிரிக்கெட்: 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி..!
x
தினத்தந்தி 28 March 2022 6:02 PM GMT (Updated: 28 March 2022 6:05 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.

மும்பை,

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில்  நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயண்ஸ் அணிகள் மோதின. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி லக்னோஅணி முதலில் விளையாடியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கே.எல் ராகுலும், குயிண்டன் டி காக்கும் களமிறங்கினர். கே.எல்.ராகுல் சந்தித்த முதல்  பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார். டி காக் 7 ரன்னில் அவுட்டானார். எவின் லிவிஸ்(10) மனிஷ் பாண்டே(7) அடுத்ததுத்து அவுட்டானதால், தொடக்கத்திலேயே லக்னோ அணி 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

இதையடுத்து தீபக் ஹூடாவும் (55) ஆயுஷ் படோனியும் (54) அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதனால், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக ஷமி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் சார்பில், சுப்மன் கில் மற்றும் மேத்யூ வேட் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் சுப்மன் கில் (0) ரன் ஏதும் எடுக்காதநிலையில் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய விஜய் சங்கர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா, மேத்யூ வேட்டுடன் ஜோடி சேர்ந்து ரன் ரேட்டை உயர்த்தி வந்தநிலையில், 33 ரன்களுக்கு கேட்ச் ஆனார். அவரைத்தொடர்ந்து மேத்யூ வேட் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அடுத்ததாக டேவிட் மில்லர் மற்றும் ராகுல் தேவாட்டியா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி, அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தியது. இந்நிலையில் இந்த ஜோடியில் மில்லர் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இறுதியில் அதிரடி காட்டிய ராகுல் தேவாட்டியா 40 (24) ரன்களும், மனோகர் 15 (7) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் குஜராத் அணி 19.4 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. லக்னோ அணியின் சார்பில் அதிகபட்சமாக சமீரா 2 விக்கெட்டுகளும், அவேஷ் கான், குர்ணால் பாண்ட்யா மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன் அணி வெற்றிபெற்றது. 

Next Story