நடுவர் அவுட் வழங்காதபோதும் தானாகவே வெளியேறிய டி காக் : பாராட்டிய எதிரணி வீரர்கள்- வைரல் வீடியோ
சந்தீப் சர்மாவின் கோரிக்கைக்கு நடுவர் அவுட் வழங்காத போதும் டி காக் தானாகவே வெளியேறினார்
மும்பை,
10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. புனேவில் இன்று நடைப்பெற்று வரும் 42-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் , பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி லக்னோ முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் - டி காக் களமிறங்கினர். நடப்பு தொடரில் சிறப்பாக விளையாடி வந்த ராகுல் இந்த முறை 6 ரன்களில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
ICYMI - Spirit of cricket: Quinton de Kock walks after edging the ball.
— IndianPremierLeague (@IPL) April 29, 2022
📽️📽️https://t.co/u1Htv2n2F4#TATAIPL#PBKSvsLSG
டி காக் 46 ரன்களில் இருந்த போது சந்தீப் சர்மா வீசிய 13-வது ஓவரில் ஜிதேஷ் சர்மாவிடம் கேட்ச் கொடுத்தார். பந்து மட்டையை உரசிய சத்தம் தெளிவாக கேட்ட போதிலும் சந்தீப் சர்மாவின் கோரிக்கைக்கு நடுவர் அவுட் வழங்கவில்லை.
இருப்பினும் டி காக் தானாகவே நடையை கட்டினார். அப்போது டி காக் அருகில் சென்ற சந்தீப் சர்மா அவரிடம் நன்றி கூறி வழியனுப்பி வைத்தார். அவர் மட்டுமின்றி எதிரணி வீரர்கள் , மைதானத்தில் இருந்த ரசிகர்கள் உட்பட பலரும் அவருக்கு கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
டி காக்-கின் இந்த செயலை ஐபிஎல் நிர்வாகம் வீடியோவோடு பகிர்ந்து பாராட்டு தெரிவித்துள்ளது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடி வருகிறது.
Related Tags :
Next Story