30–வது நாள் நினைவு அஞ்சலி காட்டுமன்னார்கோவிலில் ஜெயலலிதா முழுஉருவச்சிலை திறப்பு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு


30–வது நாள் நினைவு அஞ்சலி காட்டுமன்னார்கோவிலில் ஜெயலலிதா முழுஉருவச்சிலை திறப்பு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 5 Jan 2017 10:30 PM GMT (Updated: 5 Jan 2017 4:06 PM GMT)

30–வது நாள் நினைவு அஞ்சலியை முன்னிட்டு காட்டுமன்னார்கோவிலில் ஜெயலலிதாவின் முழுஉருவச்சிலை திறக்கப்பட்டுள்ளது. இதில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். ஜெயலலிதா முழுஉருவச்சிலை அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்–அமைச்சராகவும் இருந்தவர் ஜ

காட்டுமன்னார்கோவில்,

30–வது நாள் நினைவு அஞ்சலியை முன்னிட்டு காட்டுமன்னார்கோவிலில் ஜெயலலிதாவின் முழுஉருவச்சிலை திறக்கப்பட்டுள்ளது. இதில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

ஜெயலலிதா முழுஉருவச்சிலை

அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்–அமைச்சராகவும் இருந்தவர் ஜெயலலிதா. இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, கடந்த மாதம் 5–ந் தேதி உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த முன்னாள் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் முழு உருவச்சிலை அமைக்க மேற்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் முடிவு செய்தனர். அதன்படி, ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் செலவில் 10 அடி உயரத்தில் பைபராலான ஜெயலலிதாவின் முழுஉருவச்சிலை வடிவமைக்கப்பட்டு, காட்டுமன்னார்கோவில் சீரணி அரங்கில் வைக்கப்பட்டது.

திறப்பு விழா

ஜெயலலிதாவின் 30–ம் நாள் நினைவு நாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காட்டுமன்னார்கோவிலில் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணை செயலாளர் முருகுமாறன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. செல்விராமஜெயம், காட்டுமன்னார்கோவில் ஒன்றிய செயலாளர் கே.எஸ்.கே.பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் எம்.ஜி.ஆர்.தாசன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.பி. கலந்து கொண்டு ஜெயலலிதாவின் முழுஉருவச்சிலையை திறந்து வைத்து, அன்னதானத்தை தொடங்கி வைத்தார். அப்போது, பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் கட்சி பணியாற்றிட வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

விழாவில் மாவட்ட அவை தலைவர் எம்.எஸ்.என்.குமார், பொருளாளர் செல்வராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் வி.கே.மாரிமுத்து, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ரேணுகா அசோகன், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய செயலாளர் கலியமூர்த்தி, நகர செயலாளர் சபியுல்லா, பூமாலைகேசவன், செந்தில்குமார், நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், சண்முகம், அறிவுக்கரசன், அசோகன், வேல்முருகன், பாலசந்தர், கலியமூர்த்தி, வாசுமுருகையன், வசந்தகுமார், ஒன்றிய மகளிரணி செயலாளர் பஞ்சவர்ணம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அ.தி.மு.க.வினர் அமைதி ஊர்வலமாக சென்று, ஜெயலலிதா உருவச்சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

முருகுமாறன் எம்.எல்.ஏ. கூறுகையில், தற்போது காட்டுமன்னார்கோவில் சீரணி அரங்கில் ஜெயலலிதாவின் முழுஉருவச்சிலை வைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றுள்ளது. அடுத்த மாதம் 24–ந் தேதிக்குள் காட்டுமன்னார்கோவில் பகுதியில் உரிய தேர்வு செய்யப்பட்டு, அந்த சிலை நிறுவப்படும் என்றார்.


Next Story